ஞாயிறு, 10 டிசம்பர், 2023

பொத்தமேட்டுப்பட்டியில் புதிய உடன்படிக்கை நாடகம்

 பொத்தமேட்டுப்பட்டியில்  புதிய உடன்படிக்கை  நாடகம்!


12.10.1991 அன்று எனது ‘புதிய உடன்படிக்கை’ நாடகம் திருச்சி இரசிக ரஞ்சனா (ஆர்.ஆர்.) சபாவில் நடந்த போட்டியில் திருச்சி ஆர்.சி. மேனிலைப்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டு நடித்த நாடகம் முதல் பரிசு பெற்றது.  


அந்த நாடகத்தை அடுத்த ஆண்டு எங்கள் ஊரில் உள்ள பாத்திமா சேவா சங்கம் உறுப்பினர்கள் நடிக்க மீண்டும் அரங்கேற்றம் செய்யப்பட்டது. 

 

இன்றைய C.D. தொழில்நுட்பம் எல்லாம் இல்லாத காலத்தில் 30 ஆண்டுக்கு முன்பு நேரடியாக ஒளிப்பதிவு செய்து எடுக்கப்பட்ட நாடகம்.


அன்றைக்கு இந்த நாடகத்தில் நடித்த நடிகர்கள் கதாநாயகன் கோல்காரர் ஜேம்ஸ் ஆசிரியர், அவரின் தந்தையாக நடித்த G.G. என்கிற ஞானம் ஆசிரியர் (எனது குருநாதர்), கதாநாயகியாக நடித்த நடிகை தனலெட்சுமி, அவரின் தந்தையாக நடித்த சேவியர் ஆசிரியர் மற்றும் நடிகை எடமலைப்பட்டிபுதூர் எலிசபெத் அவர்களெல்லாம் இன்றைக்கு உயிருடன் இல்லை;  மறைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. 


நினைவில் வாழும் அவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு இதைக் காணிக்கையாக்குகிறேன்.

 "புதிய உடன்படிக்கை"  காணொலியில் காண கீழே

'கிளிக்' செய்க.


பகுதி - 1


பகுதி - 2


பகுதி - 3


பகுதி - 4


பகுதி - 5



பகுதி - 6



பகுதி - 7



பகுதி - 8


பகுதி - 9



பகுதி - 10



மாறாத அன்புடன்,


மணவை ஜேம்ஸ்.


புதன், 1 நவம்பர், 2023

மேதகு ஆயருக்கு வாழ்த்து மடல்.


திண்டுக்கல் மறைமாவட்ட

மேதகு ஆயர் தாமஸ் பால்சாமி அவர்களுக்கு  

 வாழ்த்து மடல்

 






 

உறவுகளில் நல்லுறவாய் உதித்த திங்கள்!

            உன்னதரே நற்பூலாம் பட்டி மண்ணின்

திறம்பாட வந்திட்ட தென்றல் காற்றே!

     தெய்வஅருள் கொண்டவரே! திருவின் பெற்ற

துறவறத்தைத் தூயவெண்மை தெய்வத் தொண்டை

     திருச்சிமா நகரத்தில் தெளிவின் ஏற்றீர்!

அறம்தாமஸ் பால்சாமி அடிகள் நெஞ்சம்!

     ஆயர்!மனத் தூயரிந்த அகிலம் வாழி!

 

 

முதற்பணியை மேலப்புதூர் பங்கில் ஏற்றீர்!

     முதுபழைய கோவிலிலும் புதுமை செய்தீர்!

உதவியென வந்தவர்க்காய் உம்மைத் தந்தீர்!

     உயர்கைலா சபுரத்தில் உயர்ந்து நின்றீர்!

பதவிவரும் போகுமதைப் பெரிதாய்க் கொள்ளீர்!

            பாத்திமா நகர்கோயில் பணியும் கொண்டீர்!

மதமற்ற மதப்பணியை மண்ணில் தொண்டாய்

     மறைபரப்பி மணம்பரப்பும் மலரே வாழி!

 

 

தன்னையே உலகிற்காய்த் தந்த ஏசு

            தாள்பணிந்தீர்! மறைபரப்பும் தந்தை ஆனீர்!

மின்னலென நொடிபூத்து மறையும் வாழ்வில்

     மேன்மையுறு ஞாயிறென மிளிர்ந்தீர் தொண்டால்!

கன்னலெனும் அருளுரையும் கசடு நீங்கக்

     கனிந்தருளும் திருவாக்கும் கருத்தில் தைக்க

அன்னையென அன்பீந்த அருளின் தந்தாய்

     ஆயர்நீர் மந்தையெங்கள் வாழ்த்தை ஏற்பீர்!

 


 

தோன்றின்நற் புகழோடு தோன்றச் சொன்ன

           தொல்மரபு வள்ளுவனின் வாக்கைக் காத்தீர்!

ஈன்றதினும் பெரிதுவந்தே இருப்பாள் அன்னை!

         இன்கனிகள் உம்மிதயம்! எமக்குத் தந்தீர்!

சான்றோனாய் அவைமுந்தி இருந்து தந்தை

        சபைநடுவே பெருமையுறச் செய்தீர்! ஆய

ஆன்றோரே! தாமஸ்பால் சாமி தந்தாய்!

         அன்புடனே வணங்குகிறோம்! அருளே! வாழ்க!

 









-மாறாத அன்புடன்,

மணவை ஜேம்ஸ்.

வியாழன், 26 அக்டோபர், 2023

புலவர் மனுவேல்ராஜ் அய்யா பணி நிறைவு பாராட்டு மடல்



பணி நிறைவு பாராட்டு மடல்











 

நொடிக்குள் நூறுகவி படைத்தவா!

        நோகுந் தடைபலவும் உடைத்தவா!

படிக்க மனச்சிறையுள் அடைத்தவா!

          பழகும் உறவினுக் கினித்தவா!

வெடிக்கும் எரிமலைகள் அணைத்தவா!

          விதிக்கும் தமிழெழுதி விதித்தவா

முடிக்கும் பணியினிது முடித்தவா!

       மனுவே லெனமனதுள் துடித்தவா!

 

 

சொல்லி னேர்பூட்டி உழுதவா!

           செவிகள் பாராட்டித் தொழுதவா!

புல்லில் பனியாக விழுந்தவா!

        புவியின் கவியாக எழுந்தவா!

செல்லும் இடமெங்கும் சிறந்தவா!

        சேரும் புகழ்சேர்க்க மறந்தவா!

வெல்லுந் தமிழ்கொண்டு திரிந்தவா!

        வீழ்த்தி பகைக்கருளும் புரிந்தவா!

 

                                               

வகுப்பி னறைகளிலே வாழ்ந்தவா!

        வணங்கு தமிழழகில் ஆழ்ந்தவா!

மிகுத்த சொல்வளங்கள் சூழ்ந்தவா!

      மேவு நட்பதனில் வீழ்ந்தவா!

பகுத்துப் பொழிலுரைக்க வல்லவா!

       பாட லுனக்கடங்கு மல்லவா?

மிகுத்து யானுமெதுஞ் சொல்லவா?

       மனுவேல் தமிழ்ப்பகழி வில்லவா!

 

                                                (வேறு)

 

சங்கத் தமிழ்ப்பெண்ணின்  சீரே  போய்வா!

      சபைகள் விரும்புதமிழ்ச் சாறே போய்வா!

எங்கள் தமிழ்த்துறையி னேறே போய்வா!

     எரியு  மனந்தணிக்கும் நீரே போய்வா!

பொங்கு கவியருவிப் பேறே போய்வா!

      புகழின் புதியவர லாறே  போய்வா!

மங்கு  மனத்துயரி னூறே போய்வா!

      மனுவே லெம்பள்ளி வேரே  போய்வா!

 

 

நீயும் நானும் சேர்ந்து இருந்தோம்

இருந்தோம் ஆர்.சி. பள்ளி தேன்கூட்டில்

தேன்கூட்டில் நீதானே ஒற்றை இராணித்தேனி

இராணித்தேனியைச் சுற்றியே நாங்கள் நாளும்

நாளும் போனதே முப்பத்துநான்கு ஆண்டுகள்

முப்பத்துநான்கு ஆண்டுகள் நேற்றுபோல இருக்கிறதே!

 

இருக்கிறதே என்றாலும் இனிக்கிறதே எந்நாளும்

எந்நாளும் இனிவரும் காலங்கள் இனிதாகட்டும்

இனிதாகட்டும் கவியரங்கத்தில் உந்தன் கவிதை

கவிதையுடன் பாடலும் பட்டிமன்றமும் உனதாகட்டும்

உனதாகட்டும் கலைகள் எல்லாம் உன்வசமாகட்டும்

உன்வசமாகி எங்கும் நடமாடட்டும் தமிழ்ச்சங்கம்!

 

தமிழ்ச்சங்கம் வைத்து வளர்த்த மதுரைமண்

மதுரைமண்னோடு அருட்தந்தை சூசைராஜால் வளர்ந்தவர்

வளர்ந்தவர் மனுவேல்ராஜ் வெண்கலமணியாய் ஒலிக்குமே

ஒலிக்குமே  என்றும் உந்தன் குரலோசை

குரலோசைக் கேட்க புதுக்கவிதை தவமிருக்குமே

தவமிருக்குமே ஆர்.சி.பள்ளி இனியுன் இனியோசைக்கு!

 

                                               

இனியோசையை இனியாம் என்று கேட்போமோ?

கேட்போமோ என்று கேட்டாலுமிது கட்டாயம்

கட்டாயம் ஓய்வென்பது காலத்தின் பிடி!

பிடிசுசிலாவைக் காதலித்து கரம்பிடித்த தமிழ்வேழமே!

தமிழ்வேழம் ஈன்றெடுத்த சகாயகாவியத் தங்கங்களே!

தங்கங்களே தந்திடுமே இனிவாழ்வில் இன்பங்களே!

 

இன்பங்களே என்றும் காண்பாய் முத்தமிழில்

முத்தமிழில் இயற்றமிழில் இசையுடன் வாழ்வாய்!

வாழ்வாய் நாடகத்திலும் சிறந்த நடிகராய்

நடிகராய் அன்றுமென்றும் சிறந்தே வாழ்கவே!

வாழ்கவே தமிழ்போல் வாழ்வாங்கு வாழ்கவே!

வாழ்கவே நூறாண்டுகண்டு நாடுபோற்ற வாழ்க!

 

 



பாராட்டு மடலைக் கேட்க மேலே 'கிளிக்' செய்க

 




 ஆர்.சி. மேனிலைப்பள்ளி,

திருச்சிராப்பள்ளி                                 -மாறாத அன்புடன்,

21.05.2023                                         மணவை ஜேம்ஸ்.


Related Posts Plugin for WordPress, Blogger...