புதன், 8 அக்டோபர், 2014

இதோ உங்கள் குமரன் கதைக்கிறான்....!










என்னடா தமிழ்க்குமரா ... என்னை மறந்தாயோ ? -என்னும் முந்தைய பதிவின் தொடர்ச்சி...




வானற்று மண்ணற்று வாழுந் திசையற்று

தானுற்ற நோவைத் தமிழ்க்குமரன் - கூனுற்றுத்

தாழ்ந்த தமிழகத்தில் தேம்பிக் கதைக்கின்றான்!

“ வாழ்ந்த குலத்தின் வளம்.“










இனி உங்கள் குமரன் கதைக்கின்றான்.


-இது கதையல்ல...நிஜம்!


( குமரன் 19.02.2001 அன்று கூறிய வரிகளின் எழுத்துப்பதிவு )














இதோ...

உங்கள் முன்னால் குமரன்...!
நமது பள்ளியில் 8ஆம் வகுப்பு ‘H’ பிரிவில் படிப்பவன்...
இலங்கையில்...மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னால் ராணுவத்திற்கும்...விடுதலைப் புலிகளுக்கும்...
இடையில் நடந்த போரில்...
இராணுவத்தின் தாக்குதலுக்குப் பயந்து...
நான்...எனது தாய், தந்தை, சித்தி, தம்பி, தங்கை, அம்மம்மா மற்றும் எனது
உடன்பிறவா பல சகோதர்களுடன் இந்தியா வருவதற்கு புறப்பட்டோம்.
சம்பவத்தன்று...
மாலை 6.30 மணியளவில் ...
நாங்கள் அனைவரும் மிக மகிழ்ச்சியுடன் படகில் ஏறினோம்...
படகில் ஏறியபோது எனக்கு இனி செல், குண்டு தாக்குதலுக்கு பயப்படாமல்
வாழலாம் என எண்ணி மிக மகிழ்ச்சியடைந்தேன்.
நாங்கள் படகில் ஏறியவுடனே... மழை பெய்தது
படகில் சுமார் 145 பேர் இருந்தோம்...
சற்று நேரத்தில் படகு அங்குமிங்கும் ஆடியது...

நாங்கள் அனைவரும் ‘அய்யோ...அம்மா’ எனக் கதறினோம்...


பின்னர் அனைவரும் கடலில் தாழ்ந்தனர்...


என்னையும் எனது தங்கையையும் யாரோ தூக்கியதாகக் கூறினார்கள்.

மேலும் என்னைப்போல ...

தாய், தந்தையைப் பிரிந்த பிள்ளைகள்,

பிள்ளைகளைப் பிரிந்த தாய் என...

மொத்தம் 36 பேரை உயிருடன் மீட்டனர்.

மயக்கமடைந்த நிலையில் இருந்த நான்...

அக்கராயன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டேன்.

மீண்டும் திரும்பிச் சென்று

எனது தாய், தந்தையின் இறுதி சடங்குகள் முடிந்தவுடன்


எனது சித்தியுடன் இந்தியா வந்து...

அகதிகள் முகாமில் தங்கி...

இங்கு வந்தும்...

அங்கு சென்றும் வாழ்ந்து வருகிறேன்


-மாறாத அன்புடன்,

மணவை ஜேம்ஸ்.

manavaijamestamilpandit.blogspot.in

12 கருத்துகள்:

  1. வணக்கம் ஐயா!

    தானுற்ற பேரவலம் தந்தான் குமரன்!நம்
    ஊனுயிர் இற்றே ஒடுங்கவே! தேனினிய!
    தீஞ்சுவைப் பாகுதமிழ்த் தேவதையின் மைந்தனை!
    வாஞ்சையாய்க் காத்தவும் மாண்பு!

    குமுறும் மனத்தோடு குமரனின் கதை கேட்க விளைகின்றேன்!

    தொடருங்கள் ஐயா!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞர் இளமதியார்க்கு,
      குமுறும் பலவாயிரம் மனங்களும் எனதும் ஒன்று.

      கதிரவன் அழுத கண்ணீர்
      ........கடலெனப் பொங்கிற் றாங்கே
      சதியுமே செய்த காலம்
      .......சழக்கரின் இனம ழிப்பில்
      புதியதோர் விடியல் காணப்
      .......புறப்பட்ட குமரன் காதை
      விதியதின் சதியோ அம்மா
      .......விடையதைச் சொல்வார் இல்லை!

      பாரமாய் உடலும் நிற்கப்
      ......பகைத்தவர் நகைத்தொ துக்கத்
      தூரமாய்ப் போலா மென்றால்
      ......துரத்திடும் காலன் தூண்டில்!
      யாரறி வாரோ யாங்கள்
      …….அகப்படும் காலம், நேரம்?
      வீரமும் சதிக்குத் தோற்க
      …… வீழ்வதோ தமிழர் மானம்?

      கனவுக ளோடு கட்டை
      ……கடலினில் மிதக்க அந்தத்
      தினம்மறந் திடுமோ வாழ்வைத்
      …..தண்ணீரு மழித்த காட்சி?
      இனமழித் தொழிக்கக் கண்டும்
      …… யெமக்கென்ன என்றி ருப்பார்
      தனக்கந்த இன்னல் வந்தால்
      ……தாங்கிட யார்முன் நிற்பார்?

      கண்ணீரில் உப்புச் சிற்பம்
      ……..கரையுதல் போலே ஆறாப்
      புண்ணாகி எங்கள் வாழ்வு
      ……புதைகுழி போகும் போதும்
      மண்ணாக அழித்தோம் என்று
      …….மமதையில் கூவும் கூட்டம்
      உண்டாக்கும் குமரர் செங்கை
      …….துண்டாக்கக் கதறும் ஓர்நாள்!

      அழியாத அவலக் கண்ணீர்
      …….ஆயிரம் கடல்ப டைக்க
      ஒழியாத துன்பத் தோணி
      ……..ஓட்டுந்தன் மக்கள் செல்லும்
      வழிதேடிக் குமரன் சென்றான்!
      …….“வாழ்க்கையில் இன்ப மென்றால்
      மொழி‘ஒன்றே“ என்றோன் வாழ்வு
      ……….மீட்டவென் தமிழும் நோகும்!

      நன்றி

      நீக்கு
    2. அன்பு நண்பருக்கு,

      குன்றின்மேல் இட்ட குமரன் கவிதைக்காய்

      நன்றி நவில்கின்றேன் நான்.
      -மாறாத அன்புடன்,
      மணவை ஜேம்ஸ்.

      நீக்கு
    3. வணக்கம் விஜு யோசெப் ஐயா!

      குமுறும் உங்கள் மனமுங் கண்டேன்!
      கூறிட வார்த்தை இழந்தே நின்றேன்!

      பேச நா எழவில்லை ஐயா!.. வலி கொடியது!

      எம் தாயகத்தில் நானும் என் கணவரும் ஒன்றரை வயது என் மகனுடன் இரவு தூங்கிக் கொண்டிருந்த நேரம் இதே இனக் கலவரத்தில் இமைப் பொழுதிற்குள் எதிரியின் எரிகுண்டு வீச்சிலிருந்து உயிர் பிழைத்ததும், சில தினங்களின் பின் ஒருநாள் விசையுந்து – மோட்டார் சைக்கிளில் கட்டாய வேலைப் பணிப்பின்பேரில் என் கணவர் வேலைக்குச் சென்று மீளும் போது எதிரே வந்த எதிரணிக் கும்பல் கத்தி, வெட்டரிவாள் சகிதம் மறிக்க இவர் நிற்காமல் விலத்த முயல்கையில், எதிரே வந்த முன்வீட்டில் வசிப்பவரில் அவர்களின் இலக்கு மாற, வெட்டுக்கிரையாகி அந்த அன்பு உறவு அவ்விடத்திலே தலை வேறு உடல் வேறான காட்சி…
      நினைக்கும்போது இப்பொழுதும் நினைவிழக்கின்றது எனக்கு!...:(

      இப்படி எத்தனை எத்தனை இழப்புகள் ஐயா நாம் சந்தித்தது…

      எங்கள் இனம், மொழி, மண் உற்றம் சுற்றம் எல்லாம் இழந்து..
      அவல வாழ்க்கைக்குட்பட்டு இன்னும் நாடோடியாய் நாயாத் திரிகிறோம்.

      மறக்குமோ நெஞ்சம்? மாறுமோ வஞ்சம்?
      குமரன் போன்று எத்தனை இளம்பிஞ்சுகள்!..
      மரமாகிக் காய்க்கு முன்பே களைந் தெறியப்பட்டு விட்டார்கள்!...

      காயத்திற்குக் காலம் மருந்து தர வேண்டும் ஐயா! காத்திருக்கின்றோம்!..

      நீக்கு
    4. அன்புச்சகோதரி கவிஞர் இளமதி,

      மடல் கண்டு....

      மதிக்கு(ம்) மடல் ஒன்று...

      விடுக்கும் மனம் ஒன்று.
      நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. அன்புள்ள திரு.கரந்தை ஜெயக்குமார் அவர்களே!

      நன்றி அய்யா.

      நீக்கு
  3. அன்புச்சகோதரி.

    குமரனின் வாழ்க்கைக் கதைகேட்கு...
    குமுறிய இளமதியின் பதைபதைப்பு...
    எனது பதிவினுக்குக் கண்ணீர் கலந்திட்ட...
    நினது முதன்மையான பின்னூட்டம்.
    நன்றி.
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in

    பதிலளிநீக்கு
  4. நிஜங்கள் எப்போதுமே கசக்கும்?! உண்மைதான் இல்லையா நண்பரே! மனதைத் தொட்டப் பதிவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள திரு.துளசிதரன் தில்லைஅகத்து,
      நிழல் நிஜமாகவில்லை...இங்கே
      நிஜமே நிழலாகிவிட்ட கொடுமை கண்டு...
      வசந்தங்கள் கசந்த இந்த பிஞ்சுவின் உள்ளங்களில்
      இனிமேலாவது -
      வாழ்க்கை கசக்காமல் இருக்க வேண்டும்.
      நன்றி.

      நீக்கு
  5. கொடுமைகளை அறிய கண்களில் நீர் வருகிறது ,கொடுமைக்காரர்கள் அழிவார்களாக!

    பதிலளிநீக்கு
  6. அன்புள்ள அய்யா,

    கொலைவாளினை எடடா மிகு
    கொடியோர் செயல் அறவே
    குகை வாழ் ஒரு புலியே உயர்
    குணம் மேவிய தமிழா!
    தலையாகிய அறமேபுரி சரி நீதி உதவுவாய்!
    - பாரதிதாசன் வரிகளே ஞாபகம் வருகிறது.

    நன்றி.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...