புதன், 30 ஜூன், 2021

புதிரானவன்...!

 


            புதிரானவன்…!

(‘ஊமைக்கனவுகள்’ திருமிகு.விஜு அவர்கள் விருப்ப ஓய்வு பெற்றார்.)

 


          

கொரோனாவின்

கொடிய காலகட்டத்தில்

பள்ளி மாணவர் ஆசிரியர்

பள்ளியை விட்டு

விலகியிருக்கச் சொன்னது

என்னமோ உண்மைதான்

நீ பள்ளியிலிருந்தே

விலகியிருக்க முடிவு செய்ததேனோ?!

 

அன்று -

நீ வேலை வேண்டி

வேட்டி சட்டையுடன்

நின்ற காட்சியைக் கண்டவன்

 

நீ காதலானவன்

நீ காதலால் ஆனவன்

உமையாளைக் கைப்பற்றி

இனிய இனியா அரும்பாகி... மலராகி... 

இல்லறம் இனிதாக உனதாக்கினாய்.

 

நீ வித்தியாசமானவன்

இருபத்து மூன்றாண்டு ஆசிரியப்பணியை

இருபத்து எட்டாக்கி

விருப்பத்துடன் ஓய்வை

விரும்பி எட்டிய

ஆர்.சி. பள்ளியின் முதலான

நீ வித்தியாசமானவன்.

 

நீ பணியாற்றிய பல ஆண்டுகளில்

சில ஆண்டுகளே பழகியவன்

நீ அலையில்லா

கடலைப் போன்றவன்

உனக்குள் புதைந்து இருக்கும்

பல்லாயிரம் திறமைகளை

வெளியில் காட்டாத

அதிசயச் சுரங்கம்

நீ அலையில்லா

கடலைப் போன்றவன்

பொங்கினால் சுனாமி போன்றவன்.

 

எனக்கு -

வலைத்தளத்தை அறிமுகப்படுத்தி

எனது படைப்புகளை அழியாமல்

வளப்படுத்திய உலைக்களம் நீ!

உனக்குத் தெரியுமா?

உந்தன் திறமை...!

இரு மொழிப் புலமை பெற்ற

புலமைப்பித்தன் நீ.

 

நீ மண்ணுக்குள் புதைந்திருக்கும் தங்கம்

வெளியில் தெரியவேயில்லை

உன்னை எடுத்து உரசிப் பார்த்தால் தெரியும்

சொக்கத்தங்கம் என்று…!

நீ பட்டை தீட்டிய வைரம்

யாரும் பார்க்க ஜொலிக்கவேயில்லை…!

கூழாங்கற்களுக்கு வைரத்தைப் பற்றிய

அருமை தெரிய வாய்ப்பில்லை.

 

நீ புரிந்து கொள்ள முடியாத

புதிரானவன்

எதிரிகளை நடுங்கவைத்து

சதிராடுபவன்

மாணவரைக் கண்டிப்புடன் கலங்கடித்தாலும்

அன்பானவன்

உதவி என்று வந்துவிட்டால் கருணையுடன்

கர்ணனானவன்

பழகிய நாட்களை அழகிய நாட்களாக்கி

தோழனானவன்

தேசிய மாணவர் படைக்குப் போட்டி என்றால்

முதலானவன்…!

உந்தன் படையை -

ஆணையிட்டு வழி நடத்தும்

அருளாளர் குணாளன் குணசேகர்...

உன் பணி சிறக்க

நல்வழிகாட்டும் கைகாட்டி!

பணியில் சிறந்த அலுவலர்...

பழகுவதில் பாசமுள்ள தமயனான

அன்புள்ளமுள்ள பண்பாளர்.


நீ -

அசாத்திய நம்பிக்கையுடன்

எதையும் சாதிக்கும் மனத்திட்பத்துடன்

எதையும் சாத்தியமாக்கும் துணிவுடன்

எண்ணிய எண்ணம்  எல்லாம்

நிச்சயம் நிறைவேற்றுபவன்.

 

வண்ணமயமாகும்  வாழ்க்கை - நாளும்

வளம்பெறும்... மென்மேலும் 

வாழ்ந்திரு...!  வளர்ந்திரு...!!

உயர்ந்த மனிதனான நீ

உயர்ந்து சிறந்திடுசிகரம் தொடு!

 


 










இன்று

நீ வேலை வேண்டாமென்று

செல்லும் காட்சியையும்

கனத்த இதயத்தோடு 

கண்டு கலங்கியது நெஞ்சம் …!

 

நீ புரிந்து கொள்ள முடியாத

புதிரானவன்…!

 


 -மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்  

30.06.2021                             

 


 

 

 

  

 


 


ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

‘சின்னக் கலைவாணர்’ நடிகர் விவேக் ஏப்ரல் 17, 2021 அன்று மறைந்தார்.

‘சின்னக் கலைவாணர்’ என்னும் பட்டத்தை நடிகர் விவேக்குக்கு
 மு.கருணாநிதி    கொடுத்தார்.


 



                                                                            




நடிகர் விவேக் .....


* 1961 ஆம் ஆண்டு நவம்பர் 19  ஆம் தேதி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூர் சேர்ந்த சிவ.அங்கய்யா பாண்டியன்,  மணியம்மாள்  தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். 


* இவருடைய முழு பெயர் விவேகானந்தன். இவரது தந்தை இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் ஆசிரியராக பணியாற்றியவர்.


*மதுரையில் உள்ள  அமெரிக்கன் கல்லூரியில் வர்த்தக இளங்கலைத் துறையில் பி.காம் பட்டம் பெற்ற இவர், அதே துறையில், எம்.காம் முதுகலைப் பட்டமும் பெற்றார். சிறிது காலம், தொலைப்பேசி ஆபரேட்டராக மதுரையில் வேலைப் பார்த்தார். அதன் பிறகு, சென்னைக்கு வந்து, டி.என்.பி.எஸ்.சி குரூப் நான்கு தேர்வில் வெற்றிப் பெற்று, சென்னைத் தலைமை செயலகத்தில் ஜூனியர் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார்.


* ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்து வந்த இவர், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் அறிமுகம் கிடைக்க,  அவருடைய இயக்கத்தில் உருவான  ‘மனதில் உறுதிவேண்டும்’ படத்தின் மூலம், நடிகராக அறிமுகமானார். அந்தப் படத்தில் சிறிய வேடத்தில் நடித்த இவர் மீண்டும் கே.பாலசந்தர் இயக்கிய ‘புது புது அர்த்தங்கள்’ படத்தில் நடித்து பிரபலமானார். அந்தப் படத்தில், இவர் பேசிய ‘இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்’ என்ற வசனம் இவரைப் பிரபலப்படுத்தியது.




* ‘ஒரு வீடு இரு வாசல்’, ‘புது மாப்பிள்ளை’, ‘கேளடி கண்மணி’, ‘இதய வாசல்’, ‘புத்தம் புது பயணம்’ எனப் பல படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், மின்னலே, பெண்ணின் மனதை தொட்டு, ரன், நம்மவீட்டுக் கல்யாணம், தூள், சாமி போன்ற படங்களில் நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, ரசிகர்களை சிரிக்க வைத்ததோடு, சிந்திக்கவும் வைத்தார்


*லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு இவருடைய நகைச்சுவை காட்சிகள் இடம் பெற்றன.


*தமிழில் அனைத்து முன்னணி கதாநாயகர்களின்  படங்களிலும் நடித்துள்ள இவரை, பஞ்சு படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்க வைக்க முயற்சி செய்தார் கவிஞர் கண்ணதாசனின் மகன் அண்ணாத்துரை. 


*சொல்லி அடிப்பேன் படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்தப் படம் பொருளாதார நெருக்கடிகளால் வெளியாகாத போதும் அதன் பிறகு விவேக் நாயகனாக நடித்த ’நான்தான் பாலா’, ’பாலக்காட்டு மாதவன்’ போன்ற படங்கள் வெளியாகி இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. 


*ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய இவர், சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறந்த நகைச்சுவை கலைஞனாக தன்னுடைய ஆளுமையை கோலோச்சி வந்த விவேக், சொந்த வாழ்க்கையிலும் சமூக நலனைக் குறிக்கோளாகக் கொண்டு, ‘நாட்டில் வறட்சி ஏற்பட்டதற்கு நாம்தான் காரணம், வறட்சியைப் போக்கும் வகையில் சுமார் ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவேன்’ எனக்கூறி அவ்வப்போது இத்திட்டத்தினை செயல்படுத்தி வந்தார்.


   



தொடர்ந்து பல படங்களில் முற்போக்கு கருத்துகளை நகைச்சுவை வழியே வழங்கி என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா வரிசையில் வைக்கப்பட வேண்டிய நகைச்சுவை நடிகராக உயர்ந்தார்.  அதை அங்கீகரிக்கும் விதமாக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி விவேக்குக்கு ‘சின்னக் கலைவாணர்’ என்னும் பட்டத்தைக் கொடுத்தார்.



*திரைப்படத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு ‘பத்மஸ்ரீ விருது’ வழங்கி கௌரவித்தது.


*‘உன்னருகே நானிருந்தால்’, ‘ரன்’, ‘பார்த்திபன் கனவு’, ‘சிவாஜி’ போன்ற திரைப் படங்களுக்காக தமிழ் நாடு அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.


*2002-ல் ‘ரன்’, 2003ல் ‘சாமி’, 2004-ல் ‘பேரழகன், 2007-ல் ‘சிவாஜி’ போன்ற திரைப் படங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘ஃபிலிம்ஃபேர் விருது’ பெற்றார் இவர்.


*ஆரம்பத்தில் படங்கள் இல்லாத போது மேல்மாடி காலி என்கிற சின்னத்திரை நாடகத்தில் நடித்திருக்கிறார்.


*இவரது மனைவி பெயர் அருள்செல்வி. 


* இவருக்கு அம்ரிதாநந்தினி, தேஜஸ்வினி என்கிற இரு மகள்களும் உள்ளனர்.



* பிரசன்ன குமார் என்கிற ஒரு மகன் இருந்தார். அவர் சில ஆண்டுகளுக்கு உடல்நல குறைவால் காலமானார்
















மணவை ஜேம்ஸ்.

Related Posts Plugin for WordPress, Blogger...