ஞாயிறு, 28 டிசம்பர், 2014

ஒரு தாயின் தாலாட்டு








ஒரு தாயின் தாலாட்டு


(மணவை ஜேம்ஸ்)

                                      பல்லவி

கன்னிமரி பாலகனே... மன்னவனே கண்ணுறங்காயோ...
ஆராரி....  ஆரிரரோ.... ஆரிரரோ....  ஆரிரோ...!
                                                                      
                                      அனுபல்லவி                        

விண்மீன் வழிகாட்ட ஞானிகள் வணங்கினரோ
வானத்துத் தூதரெல்லாம் வந்து வாழ்த்தினரோ
மாட்டுத் தொழுவத்திலே பிறந்த மேய்ப்பரென
மந்தையை மேய்க்க வந்தாயோ............................?  
                                                                                                                                   (கன்னிமரி
                                           சரணம்

தாலட்டத் தொட்டிலில்லை ஆயனின் குடிலில்
கருவாகி உருவானாய் மனிதனின் வடிவில்
ஏழையாய் ஏன்பிறந்தாய் என்தேவமகனே
சொர்க்கமே ஏழைக்கென சொல்வதற்கோ?   
                                                                                                                                      (கன்னிமரி    
                                                                                          
                                                                                                                                                                                                                                                                                                         
உன்னைஎன்ன சொல்லிநான் தாலாட்ட
வீதியில்வாழும் ஏழைகள்  நாங்கள்
ஏழையாகி எங்களைமீட்க வந்தாயோ?
உன்னை என்ன சொல்லிநான் தாலாட்ட?            
       
                                                                                                                                       (கன்னிமரி                                                                                                                                                                                  
========================================================================                               
                                 

 பாலனுக்குக்  கும்மி


மணவை ஜேம்ஸ்

தன்னானே நானானே...
தானானே  நானானே....

                                                         

தேடிஓடி வாருங்களேன்
தேவபாலன் பிறந்திருக்கான்
வழிகாட்ட வந்திருக்கும்
நட்சத்திரமெனப் பாடுங்களேன்
ஆடிப்பாடி மகிழுங்களே
ஆனந்தக் கும்மிகொட்டுங்களேன்.

(தன்னானே...

தன்னானே நானானே...
தானானே  நானானே...
மூடுபனியில் ஆடும்மலரே                                         
மூடப்பழக்கம் போக்க வந்தாயே
பிஞ்சுவிரல் அசைந்தாலே
பிணியெல்லாம் அகன்றிடுமே
உந்தன்விழி திறந்தாலே
உலகெல்லாம் விழித்திடுமே...!  
                                                                                                                                      ( தன்னானே...
                                                                                                                                                                                    

தன்னானே நானானே
தானானே நானானே
நல்லவிதை விதைக்கவந்த
நம்பிக்கை நாயகனே!
மெழுகாக எரிந்திங்கு
இருளினைப் போக்கவந்த
உலகத்தின் ஒளிவிளக்கே!
உவமையின் தனிச்சிறப்பே!

(தன்னானே....



                                                                                                     -மாறாத அன்புடன்,
                                                                                                       மணவை ஜேம்ஸ்.


                                              

புதன், 24 டிசம்பர், 2014

‘இயேசு’ மண்ணிலே மனிதனான்...!


                          ‘இயேசு’  மண்ணிலே மனிதனான்...!                              




                                 
அன்பையே விதைக்க வந்த

              அருந்தவப் புதல்வன் இயேசு

தன்னையே தரவே இன்று

               தரணியில் மழலை யாகி

                         

புன்னகை இதழில் பூக்கப்

                பூவிழி விடியல் பார்க்க

அன்னையின் மடியில் நெஞ்சம்

                ஆளவே பிறந்தான் மண்ணில்!

 




மண்ணிலே பிறந்த பாலன்

                மனிதனாய் வந்தே இங்கு

விண்ணிலே மீன்கள் தோன்ற

               வியப்பிலே மூன்று மன்னர்                 


கண்ணிலே கவலை நீக்கிக்

              களிப்பிலே சென்றே பார்க்க

வெண்மையாய்ப் பூத்துக்  கண்ட

              விழியெலாம் கொண்டான் வென்றான்.

                                                                                
                                                                                                         

                                                                                                      

குளிரிலே நடுங்கி மாட்டுக்   
                             
             குடிலிலே கிடந்த கோமான்

தளிரிலே தாயின் மாதா
                      
            தயவிலே தந்தை சூசை

                                                                                                      
வளியிலே கலந்த மூச்சாய்

            வாழ்விலே இன்பம் கூட்டி

ஒளிதர வந்தான் ஞாலம்

            உய்யவே மனிதன் ஆனான்!
                                                                                                                 -மாறாத அன்புடன்,


                                                                                                 

* மாலை முரசு ‘கிறிஸ்துமஸ் மலர்’
  24.12.2014 வெளியிடப்பட்டது.                                                                              


                           


                                                                                                                 மணவை ஜேம்ஸ்.

வியாழன், 18 டிசம்பர், 2014

விடியுமா?



விடியுமா?

(மணவை ஜேம்ஸ்)



                “கல்யாணி...கல்யாணி...சுந்தரமூர்த்தி தன் மனைவியைக் கூப்பிடும் சாக்கில் கத்தினார்.  அடுக்களையில் வேலையாய் இருந்த கல்யாணி கையில் கரண்டியோடு வெளியே வந்தாள்.

     “என்னங்க... காலங்காத்தாலே கத்த ஆரம்புச்சுட்டீங்க...என்னா?
                                                                                 
     “ஏன்டி கல்யாணி... மாப்பிள்ளை வீட்ல இருந்து நம்ம பொண்ணு ராதாவ... பொண்ணுப்பாக்க எத்தனை மணிக்கு வர்றதா கடுதாசி போட்டு இருந்தாங்க?“ கேட்டுக் கொண்டே சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டார் சந்தரமூர்த்தி.
                             
     “காலையில் பதினொரு மணிக்குள்ள வந்திருடறதா போட்டு இருந்தாங்களே... இதக்கூடவா மறந்துட்டீங்க...? ஆமா... எங்கே வெளியே கௌம்புராப்புள இருக்கு...?

     “கடைவீதி வரையிலும்... சும்மா...சும்மாதான் கல்யாணி...அசடு வழிந்தார்.

     “சும்மான்னாலே ஏதோ இருக்குதுன்னு எனக்குத் தெரியும்... மணி பத்தாகப்போகுது... மாப்பிள்ளை வீடு வந்திடுவாங்க... நீங்க ஒண்ணும் போக வேண்டாம்...” சற்று கடுமையாகத்தான் சொன்னாள் கல்யாணி.
                                                           
     “இல்ல... கல்யாணி... போனவுடனே வந்திடுவேன்

     “நீங்க போறது எதுக்கிண்ணு எனக்குத் தெரியும்... ஒன்னும் போக வேண்டாம்...

     “ஆமாம்... இந்த ராதா எங்க போயி இருக்கா...?”  பேச்சை மாத்தப் பார்த்தார் சுந்தரமூர்த்தி.

     “அவ... அவ பிரண்ட் லதா வீட்டுக்கு போயிருக்கா... ஏதோ வேலை விசயமா விசாரிச்சுட்டு வர்றேன்னு போனா... பி.காம். முடிச்ச அவளுக்கு ஏதாவது வேலைக்கு போகனுமுன்னு நெனைக்கிறா...?

     “அவளப் போயி இன்னைக்கு வெளியே ஏ அனுப்புச்சே...?எதிர் தரப்பு வக்கில் குறுக்கு விசாரணை செய்வதைப்போல் தன் கேள்வி இருப்பதாக நினைத்துக் கொண்டார் சுந்தரமூர்த்தி.
                                                       
     “அவ இப்ப வந்திடுவா...

     “நானும் இப்ப வந்திடுவேன்... சொன்னா நம்பு.

     “நீங்க டாஸ்மாக் கடைக்கு... குடிக்கத்தானே போறிங்க..?.

     “ஆமா... நா சம்பாதிக்கிறேன்... நா குடிக்கிறேன்... நீயா சம்பாதிக்கிறே...? 
கஷ்டப்பட்டு லாரி ஓட்டுறவன் நானு... அலுப்புக்குக் குடிக்கிறேன்.... இதுக்கு போயி ஒரேயடியா அலட்டிக்கிறியே,... ஆமா... ஒயின் ஷாப்புக்குதான்... குடிக்கத்தான் போறேன்... அதுக்கு எண்ணாங்கிறே..

     “நமக்கு புள்ளன்ணு சொல்லிக்க ஒரே ஒரு பொண்ணுதான் இருக்கா... இன்னக்கி பொண்ணு பார்க்க வர்றாங்க... நல்ல நாளும் அதுவுமா...?!

     “நாணும் அதேதான் சொல்றேன்... நல்ல நாளும் அதுவுமா புலம்பாதே... இன்னக்கி நாமெல்லாம் சந்தோசமா இருக்ணும் தெரியுமா?  கல்யாணி என்னப்பத்தி ஒனக்கு தெரியுமுல்ல... இன்னக்கி நேத்தா குடிக்கிறேன்...

     “நல்லா தெரிஞ்சது நாலதாங்க கேக்கிறேன்... நா ஒங்களுக்க வாக்கப் பட்டு வந்த நாள்ல்ல இருந்து நீங்க குடிச்சிட்டுதான் இருக்கீங்க... என்னப் போட்டு அடிச்சிக்கிட்டுத்தான் இருக்கீங்க...

     “தப்பா சொல்றியேடி கல்யாணி... கல்யாணத்துக்கு முன்னாலேயே... பதினெட்டு வயசுல...இருந்தே... வீட்டுக்கு தெரியாம ஜாலிக்கிண்ணு குடிக்க ஆரம்பிக்க... அப்புறம் போதைக்கிண்ணு குடிச்சு... இப்ப கட்ட காட்டுக்கு போற வரைக்கும் குடிக்கணுங்கிறது எ தலைவிதியா ஆயிடுச்சு கல்யாணி

     “ஏ இப்படி விரக்தியா பேசுறீங்க...?

     “விரக்தி இல்ல கல்யாணி... உண்மை என்னான்னா... சரக்க உள்ள ஊத்தலன்னா கை கால்... ஏன் உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடுது தெரியுமா?  என்னால நெசமா குடிக்காம இருக்க முடியாது... என் கை ஆடறதப்பாத்தியா? இந்தாப் பாரேன்...” சுந்தரமூர்த்தி கையை நீட்டியபொழுது அவர் சொல்வது உண்மைதான் என்பது தெரிந்தது.

     “அய்யோ... என்னங்க சொல்றீங்க... இத்தன நாளும் எங்கிட்ட இதச் சொல்ல்லையே... நா கட்டி வந்த நாள்ல்ல இருந்தே... தலையால அடிச்சுட்டேன்... குடிக்காதீங்க... குடிக்காதீங்கண்ணு... கேக்கலை... கடவுளே எ புருஷனை காப்பாத்துப்பா... ஆஸ்பத்திரிக்கி போயி வைத்தியம் பாப்போங்க...” கணவன் மேல் கல்யாணி வைத்திருக்கும் அன்பு அவள் கண்ணிலிருந்து வழியும் நீரில் தெரிந்தது.

     “அடிப் போடி... பைத்தியக்காரத்தனமா பேசாதடி... இதுக்கு மருந்து அந்தச் சரக்குதாண்டி... முள்ள முள்ளாளதான் எடுக்கணும்... நா போயிட்டு வந்திடுறேன்...

     “ஒங்க ஒடம்பு இருக்க நெலமையில... அந்த கண்றாவிய வாயில வக்கணுமா... ஒங்களுக்கு ஏதாவது ஒண்ணுன்னா... எங்க நெலமைய கொஞ்சம் நெனச்சுப்பாத்தீங்களா?...”-கேவி கேவி முந்தானையால் வாயைப் பொத்திக் கொண்டு அழுதாள் கல்யாணி.

     “ கல்யாணி பயப்படாதேடி... அவ்வளவு சீக்கிரம் செத்துரமாட்டேன்டி... இன்னைக்கு மட்டும் குடிச்சிட்டு வாரேன்....  நாளைல்ல இருந்து குடிக்கமாட்டேன் சத்தியமா...” தலையில் கை வைத்துச் சொன்னார் சத்தியமூர்த்தி.

     “சரி... கொஞ்சமா குடிச்சிட்டு... வெளியே தெரியாம உடனே வந்திடுங்க... கொஞ்சம் உள்ளே போட்டாலே வளவளன்னு பேசிட்டு யார்க்கிட்டயாவது வம்பளந்துட்டு நிக்காமா... போனோம்... வந்தோமின்னு வாங்க... மறந்திடதாதிங்க... நாளைக்கு ஆஸ்பத்திரிக்கு வர்றீங்க... என்னா சரியா?“

     “சரி... சரி... ஒரு இரு நூறு ரூபா குடு“ கெஞ்சும் குரலில் குழைந்தார் சுந்தரமூர்த்தி.

     “என்ன... இரு நூறு ரூபாயா...?”- வாயில் கைவைத்து ஆச்சர்யத்துடன் கேட்டார் கல்யாணி.

     “ஒனக்கும் ஒன்னும் தெரியாது.... சரக்கு விலையெல்லாம் சாஸ்திம்மா... அடிக்கடி சர்க்காரு... பணம் வேணுமுன்னா... இந்த விலைய ஏத்திபுடுறாங்க தெரியுமுல்ல... கொஞ்சமாவது குடிமக்கள நினைச்சு கவலப்படுறதே இல்ல...!

     “நாளையிலேயிருந்து குடிக்கமாட்டீங்களே... இந்தாங்க...சுருக்குப் பையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தாள் கல்யாணி.

     “அதாம் சத்தியம் பண்ணிருக்கேன்ல்ல... சந்தேகப்படாதே... ராதா வந்தவுடனே அந்தப் புதுச் சேலையை கட்டிக்கச் சொல்லு... நீ போயி வேலையைப் பாரு... ஓ வேலைய வேற கெடுத்திட்டேன்... போ... போ... நா வர்றேன்...” சந்தோசமாக ஏதோ பாட்டை முணுமுணுத்துக்கொண்டே வேகமாக டாஸ்மாக் கடையை நோக்கி நடந்தார் சுந்தரமூர்த்தி.
                                      
     தன் கணவனை நினைத்து பெரு மூச்சுவிட்டு... இனிப்பு பலகாரம் செய்ய முனைந்தாள் கல்யாணி.

     வெளியே சென்றிருந்த ராதா வீட்டுற்குள் நுழைந்தாள்.

     “ஏன்டி... சீக்கிரம் வாயேன்டி... மாப்பிள்ளை வீட்ல வர்றதுக்கு நேரமாயிடுச்சு... என்ன ஒ பிரண்டு லதாக்கிட்ட தங்க நெக்லஸ் வாங்கியாந்தியா?

     “ம்...ம்...” தலையசைத்தாள் ராதா.

     “சரி...சரி...போயி... அந்த புதுச்சேலையை எடுத்துக் கட்டிக்கிட்டு அந்த நெக்லஸ போட்டுக்க... சீக்கிரம்... என்னா?

     “என்னம்மா... இன்னைக்கின்னு... இவ்வளவு சுவீட் காரமெல்லாம் தேவையா?

     “ஒனக்கு ஒண்ணும் தெரியாதுடீ... நம்ம வசதியில கொறஞ்சிருந்தாலும்... நெறையா பேரு வருவாங்கல்ல... அதுவும் மாப்பிளை வேற பேங்கில்ல வேலை பாக்கிறாரு... ஒன்னோட பேசிக்கிட்டு இருந்தா ஒரு வேலையும் ஓடாது போயி ரெடியாகு”  ராதாவை அனுப்பி வைத்து வேலையில் மும்முரமானாள் கல்யாணி.
                             
     குறித்த நேரத்தில் மிகச் சரியாக மாப்பிள்ளை வீட்டார்கள் வந்து விட்டார்கள். 
ஆனால் போன மனுஷன் சுந்தரமூர்த்தியைத்தான் இன்னும் காணவில்லையே என்று கல்யாணியின் மனதுபதைபதைத்தது.  வெளியே போனவர் வருகிறாரா என்று நோட்டமிட்டபடியே வந்தவர்களை வரவேற்று வணங்கி அமரச் செய்தாள்.

     “பையனோட அப்பா நான்...” மாப்பிள்ளையின் தந்தை தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டார்.

     “எல்லாத்துக்கும் வணக்கமுங்க...” கல்யாணி கையெடுத்து வணங்கினாள்.

     “ பொண்னோட அப்பாவைக் காணோம்...

     “ஓ.... எங்க வீட்டுக்கார கேக்றீங்களா... அவரு கடை வீதி வரைக்கும் போயிருக்காரு... வந்திடுவாரு...இதோ வர்றேன்...உள்ளே சென்ற கல்யாணி மகள் ராதாவிடம் இனிப்புக் காரத் தட்டைக் கொடுத்தாள்.

     “ஏம்மா... நெறையாப் பேரு வந்திருக்கிறாங்க போல இருக்கு... எல்லாத்துக்கும் கொடுக்கனுமா?

     “மெதுவாச் சொல்லுடி... அவுங்க காதுல விழுந்திடப் போவுது.... அதுக்காகத்தான் இவ்வளவு செஞ்சேன்... மாப்பிளைளையைப் பார்த்தேன்... நல்ல சிவப்பா... நல்ல உயரமா... வாட்ட சாட்டமா... அழகா லட்சனமா... நல்லா இருக்காருடி....நீ பாரேன்... ஒனக்கு கண்டிப்பா மாப்பிள்ளை பிடிச்சு போயிடும்...போயி எல்லாத்துக்கும் பலகாரம் கொடு... பயப்படமா போடி...பலகாரம் கொடுக்கிறப்ப மாப்பிள்ளைய நல்லா பாத்திடு...போ...” என அனுப்பி வைத்தாள்.

     ராதா தட்டோடு...தரைபார்த்து மெல்ல மெல்ல அடி எடுத்து நடந்து வர, மாப்பிள்ளை அவளையே பார்த்துக் கொண்டிருக்க... ஒரு தேவதை பச்சைப் பட்டுடுத்தி பூமியில் நடந்து வருவதைப்போல தெரிந்தது.  அவனின் ஆறரையடி உயரத்திற்குச் சற்றேறக்குறைய சரியான உயரத்தில் அவள் இருந்தாள்..  உண்மையில் அவனின் அழகு இந்தப் பெண்ணிடம் தோற்றுப் போனது.  அன்ன நடை என்று சொல்வார்களே... அன்னத்த பார்த்ததில்லை... ஒரு வேளை இவள் போலத்தான் அது நடந்து இருக்குமோ? இருக்கலாம்... மனத்தில் எண்ணிக்கொண்டு இருக்கும் பொழுது அவள் அவன்முன் தட்டை நீட்டினாள்.  தட்டை வாங்கும் பொழுது அவன் முகத்தை முதன்முதலாகப் பார்த்தாள்.  அம்மா பொய் சொல்லவில்லை என்பதை அவள் மனம் உணர்த்தியது. ராதாவின் முகம் நாணத்தால் சிவந்தது. 

     மாப்பிள்ளையின் அப்பா சாப்பிட்டுக்கொண்டே சொன்னார், “நல்லாயிருக்கும்மா... சுவிட்டெல்லாம் நல்லா இருக்கு... விஷயத்துக்கு வருவோம்...நாங்களும் பொண்ண பெத்தவங்க... பொண்ணு வீட்டு கஷ்ட நஷ்டம் எல்லாம் நல்லாத் தெரியும்... எங்களுக்கு அது வேணும் இது வேணுமுன்னு கேட்கமாட்டோம்... குடும்பத்துக்கு ஏத்த பொண்ணா இருந்தா போதும்... மகன் பேங்க்ல வேலை பாக்கிறான்... கைநெறைய சம்பாதிக்கிறான். வெளியூர்ல தனியா தங்கி...இருக்கிறான்..... அவனுக்கு ஒரு துணை நல்லா அமைஞ்சா போதும்...


     “எங்க பொண்ண எந்தக் குத்தம் குறையும் சொல்ல முடியாதுங்க... வீட்டு வேலையெல்லாம் நல்லா செய்வா... ஞாயிற்றுக் கிழமை அன்னக்கி அவ சமையல்தான்னா பார்த்துக்கோங்க... ... எங்க பொண்ண நாங்களே மெச்சிச் சொல்லக் கூடாது...

     மாப்பிள்ளையின் அம்மா கல்லகலன்னு சிரித்துக் கொண்டு பேசினாள்,  “பொண்ணு மகாலட்சுமி மாதிரி இருக்கா... பொண்னு பயோ டேட்டாவைப் பாத்திட்டுத்தான் வந்தோம்... பையனும் பொண்ணப் புடுச்சிடுச்சின்னு... ஓ கேன்னு  சிக்கனல் கொடுத்திட்டான்.   மொதல்ல எங்க கண்டிசன சொல்லிடுறோம்... பொண்னுக்கு வரதட்சனை ஏதும் வாங்கமாட்டோம்...  அது அவனோட... எங்களோட லட்சியம்.  எங்களுக்கும் பொண்ணு இருக்கா... நாங்களும்  வரதட்சனை யாருக்கும் கொடுக்கவும் மாட்டோம். பொண்ணுக்கும் மாப்பிள்ளைய பிடிச்சிருக்கான்னு கேட்டுச் சொல்லுங்கம்மா...  ஆமா நாமலா பேசிக்கிட்டு இருக்கோம்... ஒங்க வீட்டுக்காரரு வர்லயே !

     “வந்திருவாரும்மா சொல்லிக் கொண்டே உள்ளே சென்ற கல்யாணி,  “ஏண்டி ராதா... மாப்பிள்ளைய ஒனக்கு பிடிச்சிருக்கா...?
“ஒங்களுக்கு பிடிச்சிருந்தா சரிம்மா...”  என்று மாப்பிள்ளை பிடித்திருப்பதை வெட்கப்பட்டு உடனே சரியென்று சொல்லாமல் சம்மதத்தைச் சொன்னாள்... காபியை ராதாவிடம் கொடுத்து அனுப்பிவிட்டு போன மனுசனை இன்னும் காணமே என்ற மனதில் நினைத்துக் கொண்டாள்.  காப்பியைக் கொடுக்கும் போது நன்றாகவே மாப்பிள்ளைய மீண்டும் நன்றாகப் பார்த்துக் கொண்டாள்.  ராதாவிற்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது... மணவாழ்க்கையை எண்ணி!
               
                சுந்தரமூர்த்தி வீட்டினுள் நுழைந்தார்... கீழிந்த பனியனும், அண்டராயருமாய் நிதானம் தெளியாத போதையில் தள்ளாடிக் கொண்டே உளறியவாறு விட்டினுள் நுழைந்தார்...“ஏன்டா... எனக்கா புத்தியில்லேங்கிறீங்க...போக்கத்த பயலுகாலா... ஒங்கள உள்ள தள்றேன்ண்டா... போன எடத்தில ஒரு சின்ன தகராறு... போதையாயிருக்கவும்தான் என்ன அடிச்சு காயப்படுத்திப்புட்டாங்க....அப்புறமா அவிங்கள கவனிச்சிக்கிறேன்... முக்கியமான வேல இருந்ததால வந்தேன்டா...ஒங்கள அப்புறம் வந்து கவனிச்சிக்றேன்...தப்பா நெனச்சுகாதிங்க... நீங்க பேச வேண்டியத எல்லாம் கல்யாணிக்கிட்ட பேசிக்கங்க... என்னால நிக்க முடியல... முதல்ல நா படுக்கனும்... தப்பா நினைச்சுக்காதிங்க... பிளீஸ்... என்னால நிக்க முடியல... முதல்ல நா படுக்கனும்... எங்கேடி கட்டில்...கல்யாணி கட்டில்.... கேட்டுக் கொண்டே கீழேயே படுத்தார், படுத்தவுடனே வாந்தி எடுத்தார்... அந்த இடமே அசிங்கமானது.

     “சொல்றேன்னு தப்பா நெனச்சுக்காதிங்க... இதுமாதிரி குடிகாரக் குடும்பத்தில சம்மந்தம் பண்ண நாங்க விரும்பல... நாங்க வர்றோம்மா...”  மாப்பிள்ளையின் அப்பா வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று பேசி பொழுதே வந்திருந்த அனைவரும் ஏதோதோ இவர்களைப் பற்றி ஏளனமாக பேசிக் கொண்டு வெளியேறினர்.

     சுந்தர மூர்த்தி இன்னும் போதையிலிருந்த தெளிவடைநது எழுந்திருக்கவில்லை... இரவாகிவிட்டது  வீட்டுக்குள்ளே இன்னும் குறட்டைச் சத்தம் பலமாகக் கேட்டுக்கொண்டிருந்தது.  இடையிடையே கெட்டவார்த்தைகளும்.  கல்யாணிக்குத் தன் இறந்தகாலம் குறித்தும் ராதாவிற்குக் தன் எதிர்காலம குறித்தும், பெருகிய கண்ணீரால் இரவு நனைந்து கொண்டிருந்தது.  வாழ்வு விடியுமா? 
                              
                                         
                                          
         பொழுது விடிந்தது.  கதவு தட்டும் சத்தம் கேட்டு ராதா கதவைத் திறந்தாள். எதிரே மாப்பிள்ளை நின்று கொண்டு இருந்ததைப் பார்த்து பிரமிப்புடன் திகைத்து நின்றாள்.  
         விழிகள் மட்டும் பேசின!                                                                                         
-மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.  


       *’மாலை முரசு’ நாளிதழில் முரசு மலர் பகுதியில் “நேரம் தவறிய முகூர்த்தம்” 
        என்ற பெயரில் 7.8.1993  அன்று வெளிவந்த சிறுகதை.
        (நன்றி-மாலைமுரசு)
        சிறிய மாற்றங்களுடன் வலைத்தளத்தில். 

      **இலங்கை வானொலியில் ‘ஆசிய சேவை’ நிகழ்ச்சியில் அந்த ஆண்டு திருச்சி           நடிகர் திரு.டி.வி.கிருஷ்ணமூர்த்தி என்பவரால் படிக்கப்பட்ட இந்தச் சிறுகதை           ஒலிபரப்பானது.                             



              
                                                 

ஞாயிறு, 7 டிசம்பர், 2014

எனது மேடை நாடகம் ‘புதிய உடன்படிக்கை’


எனது மேடை நாடகம் புதிய உடன்படிக்கை

                                                                                                                 

                                                                               

  12.10.1991 அன்று எனது ‘புதிய உடன்படிக்கை’ நாடகம் திருச்சி இரசிக ரஞ்சனா (ஆர்.ஆர்.) சபாவில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


                    அன்றைக்கு மேனிலைப்பள்ளியில் தொழில்கல்வி ஆசிரியராக (இரு பகுதி நேரம்) பணியாற்றினேன்.  அப்பொழுது எனக்கு அரசாங்கச் சம்பளம் ரூபாய் 700 .   அன்றைக்குப் போட்டியில் கலந்துகொள்ள ரூபாய் 300 நுழைவுக்கட்டணம் செலுத்த வேண்டும்.  அன்றைய தினம் அந்தக் கட்டணத்தைக் கட்ட என்னால் இயலவில்லை.  அன்றைய தினம் தாளாளராக இருந்த அருட்தந்தை A.சூசைராஜ்  அடிகளார் அவர்கள்தான் (எனக்கு பணி வழங்கியவர்...தற்பொழுது உயிருடன் இல்லை) நுழைவுக் கட்டணம் செலுத்தப் பணம் கொடுத்து உதவி செய்தார் என்பதை நன்றியுடன் நினைவு கூறுகின்றேன்.

                     அந்த ஆண்டு ரூபாய் 100 சம்பளம் அரசாங்கம் உயர்த்திக் கொடுத்தது.  ஓர் ஆண்டு நிலுவைத் தொகையாக ரூபாய் 1000 கிடைத்தது.  அதை அப்படியே எடுத்துக்கொண்டு நாடகம் நடந்த அரங்கிற்குச் சென்றேன்.  ஒப்பனை, இசை, மற்றும்  இதர செலவுகளுக்கு கையில் இருந்த பணம் முழுவதும் செலவாகி  அன்றைக்கு வீட்டிற்குச் செல்வதற்குப் பேருந்துக்குக்கூட பணம் இல்லாமல் நண்பர்கள் டிக்கட் எடுக்க எனது ஊருக்கு,  அன்றைய இரவு வந்து சேர்ந்தேன்.

       அப்பொழுது எனக்கு வயது 27. என்னுடன் நடித்தவர்கள் அணைவருமே என்னை விட வயதில் மூத்தவர்கள்.  அவர்களுடைய ஒத்துழைப்பையும், திறமையையும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.  

         எங்கள் நாடக் குழுவிற்கு ‘புனிதாலயாஎன்று பெயர் வைத்திருந்தோம். அந்த நாடகம்  பார்க்க  நுழைவுக்கட்டணம் 5 ரூபாய்... F.G.N. அரங்கமே மக்களால் நிறைந்திருந்தது....!  குறைந்த கட்டணத்தில்   ரூபாய் 500   கொடுத்து வீடியோ எடுத்தேன்.

         மாலை மலரில்’ வந்த நாடக விமர்சனம் இதோ உங்கள் பார்வைக்கு...
                


                                                       
                
                        
                                                         
                        
       
            
                     
               திருச்சி ஆர்.ஆர். சபாவில் இடம் பெற்ற நாடகப் போட்டியில் 8-வது கடைசி நாடகமான புதிய உடன்படிக்கையை வழங்கியவர்கள் புனிதாலயா நாடகக் குழுவினர்.

        இந்த வருடம் நடைபெற்ற நாடகப் போட்டியில் இது முதல் பரிசை அள்ளிக்கொண்டு போயிருக்கிறது.

கதை

             செல்வந்தர் ஆரோக்கியசாமியின் ஒரே மகன் ஜான்சன்.  பள்ளிக்கூட ஆசிரியை ஜாக்குலினை கைப்பிடிக்கிறான்.  ஜான்சனின் குடிப்பழக்கம் காரணமாக ஜான்சன்-ஜாக்குலின் தாம்பத்திய உறவு தடைபடுகிறது.

             “குடி நின்றால்தான் அந்தரங்க ஆசைகள் அரங்கேற்றம் 
ஆகும்-என்று சொல்லும் மனைவியை ஜான்சன் அடித்து உதைத்து கொலை செய்ய முயற்சி செய்கிறான்.  இதை தடுக்கும் தந்தையும் மகனும் மோதிக் கொண்டு பிரிகிறார்கள்.  ஜாக்குலின், தாய் வீடு செல்கிறாள்.  ஜான்சன் சீரழிந்த பெண்களின் துணையை நாடுகிறான்.

             ஆர்.சி. கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்ததால் விவாகரத்து செய்ய முடியாது என்றாலும் கணவனுடன் சேர்ந்து வாழவே முடியாது என்ற நிலைக்கு ஜாக்குலின் தள்ளப்பட்டதால், பாதிரியார்களின் நடுவர் மன்றம் விசாரணை நடத்துகிறது.  ஜான்சனை விட்டு அவள் பிரிந்து வேறு திருமணம் செய்துகொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

             ஜான்சன் மோசமான பெண்கள், மிதமிஞ்சிய குடி ஆகியவை காரணமாக நோயில் விழுகிறான்.  தன் மனைவியிடம் மன்னிப்புக் கேட்கத் துடிக்கிறான்.  தவறை உணர்ந்த கணவனை ஆஸ்பத்திரியில் சந்திக்கிறாள்.  அவனையே மீண்டும் ஆயுட்கால துணையாக ஏற்றுக் கொள்கிறாள்.

மோதல்

              தந்தை மகனாக வந்தவர்கள் ஜார்ஜ் ஸ்டீபன், மனுவேல்ராஜ் ஆகியோர் அருமையான நடிப்பு.  மனைவியிடம் கொடுமையாகவும், விசாரணை குழுவிடம் அப்பாவியாகவும், படுக்கையில் விழுந்தபோது அசல் நோயாளியாகவும் வித்தியாசப்படுத்தி அசத்தியவர் மனுவேல்ராஜ்.
குடிக்கிறது தப்புன்னா...ஏன் பிராந்தி கடையை திறக்கிறார்கள்...?”  -யதார்த்தமான கேள்வி.

              ஆரோக்கியசாமி ஜான்சன் கதையில் மோதினார்கள் என்றால் ஜார்ஜ் ஸ்டீபனுக்கும், மனுவேல்ராஜ்க்கும் உணர்ச்சிமயமான நடிப்பில் ஏக போட்டி.  ஜாக்குலின் தந்தை ஞானசவுந்தர் ஆன செபாஸ்டினுக்கும் இதில் பங்கு உண்டு

               ஜாக்குலின் ராஜேஸ்வரி கேட்கவா வேண்டும்? கண்ணீரில் மூழ்கடித்து விட்டார்கள்.  ஜான்சனின் நண்பர்களாக வந்து அட்டகாசம் செய்தவர்கள் லூர்து சகாயராஜ், ஆரோக்கியராஜ், அடிஷனல் பிராங்க், பாதிரியார் தாமஸ் வேடத்தில் ஆரோக்கியசாமியும், நடுவர் குழு பாதிரியார்களாக வந்த ஆச்சர்யம், மரிய ஜான்பிரிட்டோ, ஜெரால்டு    மணவைஜேம்ஸ், ஜெரால்டு ஆகியோரும் நிறைவு செய்திருந்தார்கள்.

சிரிப்பு அலை
          
              டாக்டர் காதில் ஸ்தெலஸ்கோப்-ஐ வைக்காமலேயே நோயாளி ஜான்சனை டாக்டரான அந்தோணிசாமி சோதனை செய்தது... சீரியஸ் ஆன கட்டம் என்றாலும் இந்த சிறிய கவனக்குறைவின் காரணமாக நாடகத்தில் சிரிப்பு காட்சிகள் இல்லாத குறை நீங்கியது.  இதில் வசனம் வெளியே கேட்காதது குறை.   
       
               அர்த்தமுள்ள வசனங்கள், அடுக்கு தொடர் போன்ற பிசிர்’ இல்லாத காட்சி அமைப்பு, தெளிந்த கதை ஆகியவற்றடன் இயக்கத்தை ஏற்ற மணவை ஜேம்ஸ்சின் திறமையை பிரதிபலித்தன.  ஜொலிக்கட்டும்.

முதல் பரிசு

                இசை ஒய்.ஜேம்ஸ் இன்னும் கொஞ்சம் இனிமை சேர்த்திருக்கலாம்.  டாக்டரின் தேவை இல்லாத சிரிப்பும், ஆஸ்பத்திரில் தனிமையில் ஜான்சன் கதை சொல்லுவதும் ஒட்டவில்லை.  நல்ல மனைவி கைபிடித்த கணவனை மன்னிக்கும் மாண்புமிக்கவள் என்ற கருத்தை மையமாக வைத்து சுழன்ற இந்த நாடகத்தின் முடிவு வழக்கமானது.

                உயிரைக் கொடுத்து உழைத்தாலும் அதிஷ்டம் வேண்டும்.  அது இவர்களுக்கு இருக்கிறது. காரணம் முட்டி மோதிய 8 நாடகங்களில் முதல் பரிசு பெற்ற நாடகம் இந்த புதிய உடன்படிக்கைதான்.
                                 
           முதல் பரிசு பெற்ற நாடகம் புதிய உடன்படிக்கை’.
           ‘மீண்டும் தலைப்பு செய்திகள்2 –வது பரிசை பெற்றது.
           சிறந்த கதையாக புதிய உடன்படிக்கை தேர்வு செய்யப்பட்டது.
           சிறந்த இயக்கத்துக்கு மணவை ஜேம்சும்,
           சிறந்த நடிகருக்கான பரிசை மனுவேல் ராஜும்
           பெற்றார்கள்.
                                                                       

                                                                                    வளர்க நாடகக் கலை.

          
 விரைவில் புதிய உடன்படிக்கைநாடகம் You tube-இல் என்னுடைய வலைத்தளத்தில் வெளியிடப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
                                                      
           நன்றி.

-மாறாத அன்புடன்,
 மணவை ஜேம்ஸ்.  


        
Related Posts Plugin for WordPress, Blogger...