திங்கள், 15 செப்டம்பர், 2014

அண்ணா... உலக சாதனை...!



அண்ணா...உலக சாதனை!

                                                         (மணவை ஜேம்ஸ்)

அண்ணா!
‘தமிழ்நாடு’-என்று பெயர் சூட்டித்
தாழ்ந்த தமிழகத்தைத்
தலைநிமிர வைத்த
தனிப்பெரும் தலைவரே!



நடராஜனின் பேர் சொல்ல வந்த
பிள்ளை- நீ...
பங்காரு அம்மாளுக்கு என்றும்
பங்கம் நேராது திகழ்ந்த
கிள்ளை- நீ.

அண்ணா-
இருபத்து ஒன்றில்-
அண்ணி ராணியை மணந்த
திராவிடத்தின் ராஜா!

பட்டப்படிப்புப் படித்த பிறகு-
பச்சையப்பபன்
உயர்நிலைப்பள்ளியில்-
ஆங்கில ஆசிரியன்...
அப்பொழுது
அரசியலில் சிறியன்..!.

திருப்பூரில்-
பெரியாரைச் சந்தித்ததிலிருந்து...
அரசியலில் பெரியன்...
‘திராவிட நாடு’-
இதழுக்கு உரியன்...
‘திராவிட முன்னேற்ற கழகத்தை’
படைத்த பேரறிஞன்...
இந்தியை என்றும்
 எதிர்த்த நிறைஞன்...
அதனால்  தமிழகத்தில்
வெற்றியைப் பறித்த முதல்வன்!



எளிமையின் எழிழகமே!
பேச்சில் பொடிப்போட்டா
சொக்க வைத்தாய்..?
எல்லோரும் உன்னிடம்
சிக்கிக் கொண்டனரே!

நீ-
எழுதி நடித்த நாடகங்கள்...
தீட்டிய திரைப்படங்கள்தான்...
எத்தனை எத்தனை?
அத்தனையும்
சமுதாயத்திற்குச் சத்தான முத்தல்லவா?
மூடத்தனஇருளில்
மூழ்கிக் கிடந்தவர்களை
உன் வேடத்தனத்தால் விழிக்கவைத்த
உதயசூரியனல்லவா!

                                           
இதயக்கோவிலின்-  
உதய தெய்வமே...!
திராவிடத்தின் தீர்க்கதரிசியே...
உன் ஆற்றலில் மயங்கித்தானோ
புற்றுநோய்கூட
புற்றீசலாக
உனைச் சுற்றி வந்ததோ?


வெற்றிலையோடு புகையிலையையும்
மெல்லும் பழக்கத்தால்
மெல்ல நோயும் உன்னை மென்றதோ?
வெள்ளைக்காரனைப் போல்
உன்னிடம்
ஒட்டியே-
உன் உடல் நலச் சுதந்திரத்தைப்
பறித்து விட்டதே!

அதற்குக்கூட-
அடிமையாக வாழக்கூடாதென்றா
அகிலத்தை விட்டுச் சென்றாய்?
காஞ்சித்துரையே!
எப்படி மனம் வந்தது
எங்களை விட்டுச் செல்வதற்கு!

நீ-
இறப்பில் கூட-
உலக சாதனை புரிந்தவன்...
உன் இறுதி ஊர்வலத்தில் ...
15 மில்லியன் மக்களுக்கு மேல்...!  


15 செப்டம்பர் 1909இல்-
பிறந்தாய்...
பிறந்த பிறகு
நீ-
செய்ததனைத்தும்
உலக சாதனைதான்!


                                                                                        -மாறாத அன்புடன்,
                                                                                          மணவை ஜேம்ஸ்.
(அண்ணா 106ஆவது பிறந்தநாளுக்காக)

5 கருத்துகள்:

  1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. அய்யா,
    செட்டிங்க்ஸ் சென்று word verification என்பதை மாற்றினால் பிறர் கருத்துசொல்ல எளிமையாக இருக்குமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள திருமதி.மைதிலி கஸ்தூரி ரெங்கன் அவர்களுக்கு,

      வணக்கம். தாங்கள் கூறியபடி மாற்றங்கள் நண்பர் திரு.விஜு அவர்களின் உதவியுடன் செய்து விட்டேன். மேலும் எனது வலைப்பக்கம் வந்து கருத்திடும் படி அன்புடன் அழைக்கின்றேன்.

      திருமிகு. நா.முத்து நிலவன் அய்யா கேட்டுக் கொண்ட படி ’பாலோயர்’ பக்கம் திறந்துள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

      நன்றி.

      -மாறாத அன்புடன்,
      மணவை ஜேம்ஸ்.
      manavaijamestamilpandit.blogspot.in

      நீக்கு
  3. இன்று தான் அறிஞர் அண்ணாவின் கையெழுத்து கண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...