திங்கள், 1 செப்டம்பர், 2014

மீண்டும் மகாத்மா!




                                மீண்டும் மகாத்மா!


மனிதா!
இருட்டில் இருந்துகொண்டே...
வாழ்வில்-
வசந்தம் வந்து விடாதா என்று
காத்திருக்கிறாய்...!


இருட்டில் இருக்கிறாய்...
நீ-
வெளிச்சத்திற்கு
வருவது எப்போது?                                           

பகுத்தறிவுத்  தீக்குச்சியை
உரசும் வரை
உனக்குள் வெளிச்சம் இல்லை...!

வெளிச்சம்-
வெளியே இல்லை...
உள்ளத்தின் உள்ளே உள்ளது...
உன்-
இதயம் சுடாராகும்போதுதான்
உதயம்!

சூரியன் ஒளியாலானது...
நிலையானது...
மறைவதைப் போல
உனக்குத் தெரிந்தாலும்...
உண்மையில் மறையாதது!
பூமிதானே...
சூரியனைச் சுற்றுகிறது...
‘நானா சுற்றுகிறேன்’
என்றிருக்காதே!
நீயும் பூமியில்தான் வாழ்கிறாய்!

ஒளியை நோக்க...
உனக்கு-
நோக்கமிருந்தாலும்
இருப்பதென்னவோ
இருட்டில்தானே?

மண்ணாள்பவருக்கும்....
மதவாதிகளுக்கும்...
நீ-
‘பூம்...பூம்...’மாடாகிப்போனாய்...!

காரல் மார்க்சை...
நீ-
கற்றிருந்தால்...
எதற்கும் தலையசைக்க
கற்றுக்கொண்டிருக்க மாட்டாய்...!
இராமசாமியைப் படித்திருந்தால்...
இராம சாமியை வணங்கமாட்டாய்!

நம் நாட்டு-
கவர்ச்சித் தலைமைகளிடமிருந்துதானே
கற்றுக் கொண்டாய்...                                             மடையனாய் மாடாகிப்போக!        
                                     

                                                                                         
யானை முகத்தான்-
தும்பிக்கையால்
பால் குடிக்கிறானென்றால்
நம்பிக்கை கொள்கிறாய்...!
பால் கிண்ணத்தோடு
பணிந்துருகுகிறாய்.                                            

மனிதனை-
மதத்துக்குள் பிடித்துப்போட
மதம்பிடித்தலைவது...
யானை முகத்தானோ?
இல்லையே!

மனிதனை-
இறைவன் படைத்தான்
என்பவர்கள் ஆன்மீகவாதிகள்...!
இறைவனை-
மனிதன் படைத்தான்
என்பவர்கள் பகுத்தறிவுவாதிகள்...!

ஜனநாயகம்
மதநாயகமாகி
செம்மறி ஆடுகளாய்
மக்களை மாக்களாக்கி விட்டனரே?

தர்ம தேவதையின்-                                        
சேலையை உரிந்து...
வேசியின் மானம் காக்கும்
வேடதாரிகள்தானே
இன்றைய அரசியல்வாதிகள்.

எவன் ஆண்டால் என்ன?
எமன் ஆண்டால் என்ன?
என்றிருக்காதே?
இனி-
யார் ஆண்டால்
இந்த-
பார் வாழும்
என்று எண்ணு!

மனிதா...
விழித்துக்கொள்!
மாறிவிடு...!மாற்றிவிடு...!!
பயணப்படு...
ஒளியை நோக்கி...
அதில்-
சுயநலவாதிகள் எரிந்து போகட்டும்...
உலகில் மீண்டும் மகாத்மாக்கள்
உலா வரட்டும்!





                                                                                  -மாறாத அன்புடன்,

                                                                                    மணவை ஜேம்ஸ். .






2 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...