புதன், 19 நவம்பர், 2014

“வீரமாமுனிவர் வளர்தமிழ் மன்றம்”



                 
தமிழ் வளர்த்த

இத்தாலிய பேரறிஞர் வீரமாமுனிவர் பிறந்தநாள்  8-11-2014 அன்று




“வீரமாமுனிவர் வளர்தமிழ் மன்றம்


திருச்சி, எங்கள் ஆர்.சி.மேனிலைப்பள்ளியில்

தொடங்கப்பட்டது.

தாளாளர் அருட்திரு.A.சூசைராஜ் அடிகளார் அவர்கள்



அறையைத் திறந்து வைத்தார்.







தலைமையாசிரியர் முனைவர்.எம்.குணசேகர் அவர்கள்

. குத்துவிளக்கு ஏற்றினார்.






தமிழாசிரியர் திரு.சு.குணசேகர்
 நிகழ்ச்சியைத் தொகுத்து  வழங்கினார்..

***********************************






தமிழாசிரியர்திரு.இ.மனுவேல்ராஜ்  கவிதை படித்தார். 

“வெளிச்சம் ஏற்றிய வெளிநாட்டு விளக்கு

வீரமா முனிவன்-
இத்தாலித் தாய் பெத்த பிள்ளை
இந்தியத் தாய்க்குத் தத்துப் பிள்ளை
தமிழ்த் தாயின் முத்துப் பிள்ளை...!

வீரமா முனிவன்-
தமிழக இயேசு சபைக்கு விடியல்
தமிழன்னைக்குப் புதையல்...!

காவி கட்டி ஊர் சுற்றிய
காவிய நாயகனே...!
மன்னர்களுக்குத் துதி பாடிய காலத்தில்
மரியன்னைக்குத் துதி பாடியவன் நீ...!
வள்ளல்களைப் புகழ்ந்த தேசத்தில்
வளனாரைப் புகழ்ந்தவன் நீ...!

‘தேம்பாவணி–நீ
தமிழன்னையின்
தாமரைப் பாதங்களுக்கு
மாட்டிவிட்ட தங்கக் கொலுசு...
படிக்கின்ற போதெல்லாம்
பறிபோகுது மனசு...!

உமக்குப் பிடித்தது எல்லாம்
இலக்கணம்...
இறுதிவரை-
உமக்குப் பிடிக்காதது தலைக்கனம்...!
நெற்களஞ்சியங்கள்
நிறைந்த மண்ணில்
சொற்களஞ்சியங்களை
நிரப்பியவன் நீ...!
தங்கத் தமிழை
தரணியெங்கும் பரப்பியவன் நீ...!

நீ கற்றுத் தேர்ந்த
பதின்மூன்று மொழிகளும் உடலானது...
தமிழ்தான்-
உனக்கு உயிரானது...!

‘கமல்ஹாசன்கலைஞானி
வீரமாமுனிவர் தமிழ்ஞானி
இருவரையும் வளர்த்தவள் ‘கலைவாணி
இருவருமே-
தமிழர் நெஞ்சங்களைத் திருடிய ‘களவாணி



கமல்ஹாசன்-
திரையில் தமிழ் வளர்த்தார்...
வீரமாமுனிவர்-
திரைகடல் தாண்டி வந்து
தமிழ் வளர்த்தவர்...!

ஆனால்-
வீரமாமுனிவர் இத்தாலியைத் தவிர
எத்‘தாலியும் அறியாதவர்...!

வீரமாமுனிவன்-
தமிழன்னை தன் வீட்டில்
ஏற்றி வைத்த
வெளிநாட்டு விளக்கு...
அவரது பணிக்கு
இல்லை கணக்கு...!

வீரமா முனிவனே...!
நீ-
இருந்த வரை தலையில்
பாகை சூடினாய்...
இறந்த பிறகு-
தமிழர் நெஞ்சில் வாகை சூடினாய்...!
                                                                  *********************

                                                                     
                                                                           
                            
            வேதமாமுனிவர் பற்றிய வாழ்க்கை வரலாற்றை திரு.J.P.பிராங்க் முதுநிலை ஆங்கில ஆசிரியர் பேசுகையில் ...

            இத்தாலி நாட்டு வெனிஸ் மாகாணத்தில் மான்டுவர் மாவட்டத்தில் காஸ்த்திக்கிலியோன் என்ற சிற்றூரில் டான் கொண்டாப்போ பெஸ்கி, எலிசபெத்து ஆகியோரின் மகனாக்க் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி 1680 ஆண்டு நவம்பர் திங்கள் 8 ஆம் நாள் பிறந்தார்.

            1710 தமிழகத்திற்கு வந்து மதுரையில் காமநாயக்கன்பட்டியில் இயேசு சபையைத் சேர்ந்த குருவான இவர் கத்தோலிக்கத் திருச்சபையின் மறைப்பணியைப் பரப்பத் துவங்கினார். இத்தாலியம், கிரேக்கம், எபிரேயம், இலத்தீன், போச்சுகீசு, தமிழ், தெலுங்கு சமஸ்கிருதம், பாரசீகம், இந்துஸ்தானி என பத்து மொழிகளை அறிந்திருந்தார்.  தமிழ்நாட்டில் அனேக கிறிஸ்துவ தேவ ஆலயங்களை அமைத்த பெருமை இவரைச் சாரும்.

                                
            இவர் 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசுக் கிறிஸ்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித ஜோசப்பின் வரலாற்யையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப ‘தேம்பாவணிஎன்ற பெருங்காவியமாக இயற்றினார்.

            முதன் முதலாக தமிழ்மொழியில் ‘சதுரகராதியை நிகண்டுக்கு ஒரு மாற்றாக உருவாக்கினார்.  அக்காலத்தில் சுவடிகளில் மெய்யெழுத்துகளுக்குப் புள்ளி வைக்காமலே எழுதுவது வழக்கம்.  புள்ளிக்குப் ஈடாக நீண்ட கோடிருக்கும்.  மேலும் குறில், நெடில் விளக்க ‘ரசேர்த்தெழுதுவது வழக்கம்.  “ஆ“ என எழுத “அரஎன 2 எழுத்துகள் வழக்கிலிருந்த்து.  (அ;அர, எ;எர) இந்த நிலையை மாற்றி “ஆ,ஏஎன மாறுதல் செய்தவர் இவர்.

               தமிழ்நாட்டில் 37 ஆண்டுகள் பணியாற்றிய இவர் 1747ஆம் ஆண்டு பெப்ருவரி நான்காம் நாளில்  தமது 67ஆவது வயதில் இயற்கை எய்தினார்.  அங்கு அவரை அடக்கம் செய்த கல்லறையும் தெரியாத நிலையில் இருப்பது தமிழ் மக்களுக்கு வருத்தமளிக்கும் செய்தியாகும்...
என்று அவரின் வாழ்க்கை வரலாற்றைச் சிறப்பாக எடுத்துரைத்தார்.           
                                                   
                                                                 
           
            தமிழ் மன்றம் தொடங்கி...தொடர்ந்து செயலாற்ற உள்ளதைப் தலைமையாசிரியர் எம்.குணசேகர் அவர்கள் பெருமையோடு பேசிப் புளகாங்கிதம் அடைந்தார்கள்.

                                                     ************************



                                                                           
                                                                             
                
                               தமிழ் மன்றத்தின் செயல்பாடுகள் பற்றி...                                                         முனைவர். உ. ஆரோக்கியசாமி அவர்கள்  விளக்கிக் கூறும் பொழுது...தினமும் செய்தித்தாள்கள்,(தி இந்து(தமிழ்...தினமணி நாளிதழ்) வார இதழ்கள்,(புதிய தலைமுறை, புதியதலை முறை கல்வி, முக்கியமான இலக்கிய நூல்கள், அறிவியல் சம்மந்தமான நூல்கள், போட்டிகளில் கலந்து கொள்வதற்காக பயனுடைய நூல்கள் அனைத்தும் அறையில் இருக்கும்.  ஆண்டு தோறும் ஒரு தமிழறிஞரின் பிறந்தநாள் விழாவும், ஒரு சமயவிழாவும், (தீபாவளி, இரம்ஜான், கிறிஸ்மஸ்), தமிழர் விழாவும் (பொங்கல்) நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  அப்பொழுது போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மாணவர்கள் அதனை நல்ல முறையில் பயன்படுத்தி பயனடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்று பேசினார்.

            
            rcveeramamunivar என்ற முகவரியில் முகநூல்  தொடங்கப்படுகிறது என்றும்,
rcveeramamunivar@gmail.com   என்ற மின்அஞ்சல் முகவரியும் தொடங்கப்பட்டுள்ளது.தகவலையும்...அனைவரும் அதில் தங்கள் படைப்பை இடம்பெறச் செய்து பார்முழுக்க பார்த்து பயனடையவும்...தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு இந்த தளத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சுட்டிக்காட்டிப் பேசினார்.

                                                                    
                              கட்டுரைப் பேச்சுப்போட்டிகளில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு, தாளாளர் தந்தை அவர்கள் மன்றம் அளித்த  நல்ல நூல்களைப் பரிசாகக் கொடுத்து....                                          

                                                                            


                               மாணவர்களுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறி...இதைப் பயனுள்ளதாக ஆக்குவது மாணவர்களாகிய உங்களின் கைகளில்தான் உள்ளது என்று கூறி வாழ்த்தினார்.
                                                  ************************



                                                                      


                                                                      
             தமிழ்மன்றம் தொடங்கப்  பெருமுயற்சி எடுத்து அதில்  ‘வெற்றிகொண்டான்’ தமிழாசியர் திரு.ஜான் பிரிட்டோ அந்தோணி அவர்கள் அனைவரையும்  வரவேற்க... அவரை  அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.








                                                                           


-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.




16 கருத்துகள்:

  1. அய்யா,
    வணக்கம். இதில் ஊமைக்கனவுகள் பதிவர் எங்கேனும் இருக்கிறாரே என்பதை அறியத் தர வேண்டுகிறேன்.
    நன்றி

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள அய்யா,

    வணக்கம். ஊமைக்கனவுகள் பதிவர் ...மன்றத்திற்கு நிதி தந்து ஊக்கப்படுத்திக்கொண்டு இருக்கிறார். நிழல் நிஜத்தைக் காட்டுவதில்லையே...!

    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. வீரமாமுனிவரின் கவிதை வீரமுடன் முழங்குகிறது நண்பரே,,,,, வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. வீரமா முனிவன்-
    இத்தாலித் தாய் பெத்த பிள்ளை
    இந்தியத் தாய்க்குத் தத்துப் பிள்ளை
    தமிழ்த் தாயின் முத்துப் பிள்ளை...!

    உண்மை உண்மை

    பதிலளிநீக்கு
  5. ஆகா நிகழ்வு அருமை வாழ்த்துக்கள்
    சரி யாருங்க கரும்பலகையில் எழுதியது ... அருமை அசத்தல் எனது பாராட்டுக்களை தெரிவித்துவிடுங்கள்

    பதிலளிநீக்கு
  6. அன்புள்ள அய்யா,

    மிக்க நன்றி. ஓவிய ஆசிரியர்கள் கரும்பலகையில் எழுதியது. அவசியம தங்களின் பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. நிகழ்ச்சிகளை படங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி. சில இடங்களில் பின்புலமாக (Background) கொடுத்த வண்ணங்கள் என்ன எழுதி இருக்கிறது என்பதை மறைத்து விட்டன. அடுத்தமுறை கவனமா இருக்கவும்.

    பதிலளிநீக்கு
  8. அன்புள்ள அய்யா,

    தங்களின் கருத்திற்கு நன்றி அய்யா. அடுத்தமுறை கவனமாக இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. படங்களோடு அருமையான பதிவு நண்பரே
    நன்றி
    வீரமாமுனிவர் புகழ் பாடுவோம்

    பதிலளிநீக்கு
  10. அன்புள்ள கரந்தையாருக்கு,

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...