திங்கள், 22 மே, 2017

புதிய உடன்படிக்கை- 10 - நாடகம்



காட்சி  10

இடம்மாளிகை

பாத்திரங்கள்ஜாக்லின் சித்ரா, ஜான்சன்.



முன்கதை

           செல்வந்தர் ஆரோக்கியசாமியின் ஒரே மகன் ஜான்சன்.  பள்ளிக்கூட ஆசிரியை ஜாக்குலினை கைப்பிடிக்கிறான்.  ஜான்சனின் குடிப்பழக்கம் காரணமாக ஜான்சன்-ஜாக்குலின் தாம்பத்திய உறவு தடைபடுகிறது.             “குடி நின்றால்தான் அந்தரங்க ஆசைகள் அரங்கேற்றம் ஆகும்-என்கிறாள்.)



     (ஜாக்லின்  சேரில் அமர்ந்து புத்தகத்தைப் படித்துக் 

கொண்டிருக்றாள்... தள்ளாடிக் கொண்டே உள்ளே நுழைகிறான் 

ஜான்சன்)

ஜான்சன்: என்னடி... ஒய்யாரமா ஒக்காந்திருக்காய்... ஒன்னும்... வீட்ல

வேலை ஒன்னும் இல்லையா...?

ஜாக்லின்: (எழுந்து நின்று) எல்லா வேலையும் முடிச்சிட்டுதாங்க

ஒக்காந்து இருக்கேன்... ஆமா இன்னைக்கும் குடிச்சிட்டுத்தான்

வந்திருக்கீங்களா...?  ஒங்கள எப்படிங்க திருத்துறது...?

ஜான்சன்: (எகத்தாளமாகச் சிரித்துக் கொண்டே) நாய் வாலை நிமித்த 

முடியுமா...?

ஜாக்லின்: நாய் நன்றியுடைதுங்க... அதுக்கு சோறு போடுறவங்க... 

சொல்றதையெல்லாம் கேக்கும் தெரியுமுல்ல... சொல்ல மறந்துட்டேன்... 

இன்னக்கி எங்க அப்பா வந்திருந்தாருங்க...




ஜான்சன்: ஓ...கோ... எதுக்கு...?

ஜாக்லின்: எனக்கு,  இன்னைக்கி பிறந்தநாளுங்க... எனக்குப் பட்டுப்புடவை

வாங்கிட்டு வந்திருந்தாரு...!

ஜான்சன்: எனக்கு...?

ஜாக்லின்: (இடைமறித்து) ஒங்களுக்கும் பேண்ட் சர்ட் எடுத்திட்டு 

வந்திருந்தாரு...!

ஜான்சன்: அதெல்லாம் ஒன்னும் வேணாம்...

ஜாக்லின்: பின்னே... என்ன ணுமாம்...?

ஜான்சன்: இனி... நானும் ஒரு தொழில் செஞ்சு... கை நிறைய 

சம்பாதிக்கலாமுன்னு...

ஜாக்லின்: என்ன தொழில்ங்க...?

ஜான்சன்:  அதெல்லாம் அப்புறம் சொல்றேன்... மொதல்ல ஒங்க அப்பாட்ட

நா கேட்டேன்னு ஒரு நாற்பதாயிரம்...

ஜாக்லின்: என்ன நாற்பதாயிரமா...?  எங்க வீட்டைப்பத்தி ஒங்களுக்கு 

நல்லா தெரியும்... ஏதோ கஷ்டப்பட்டு... என்ன படிக்க வச்சு... டீச்சர்

வேலையும் வாங்கிக் கொடுத்தாங்க... போதாத்துக்கு இருபத்து அஞ்சு

பவுனு நகை போட்டும் கட்டிக் கொடுத்தாங்க... பாவம் எங்க அப்பாவுக்குப்

போதும் போதுமுன்னு ஆயிடுச்சு... இனி அவர்ட்ட கொடுக்கிறதுக்கு 

ஒன்னுமில்லே... நாம கேக்கிறதில்லையும் அர்த்ததுமுமில்ல... அதுனால

அந்த பேச்ச விட்டிட்டு வேற பேசுங்க...

ஜான்சன்: அதெல்லாம் எனக்குத் தெரியாது... கடன உடன பட்டாவது

வாங்கித்தரச் சொல்லு... நீ சொன்னா ஒங்க அப்பா கேக்கமயா 

போயிடுவாரு...

ஜாக்லின்: ஏன்... ஒங்க அப்பாட்ட கேக்க வேண்டியதுதானே...

ஒங்கட்டதான் எவ்வளவோ இருக்கே...!


ஜான்சன்:  எங்க அப்பா இதுக்கு தரமாட்டாரு...


ஜாக்லின்: எதுக்கு...?  எதுக்குன்னு சொன்னா... மாமாட்ட சொல்லி... நா

வாங்கித்தாரேன்...

ஜான்சன்: ஒன்னும் வேண்டாம்... ஒங்க அப்பாட்ட க்டு வாங்கித் தந்தாப்

 போதும்...

ஜாக்லின்: முடியாது...

ஜான்சன்: முடியாது...?  எங்கே இன்னொருக்க சொல்லு...

ஜாக்லின்: முடியாது... முடியாது... முடியாது...

ஜான்சன்: (ஜாக்லின் கன்னத்தில் ஓங்கி ‘பளார்ன்னு அறைகிறான்)

இப்பச் சொல்லு...

ஜாக்லின்: (கன்னத்தை தடவிக்கொண்டு... அழுது கொண்டே

கண்ணீருடன்) எங்க அப்பாகூட அடிச்சதில்லை... ஏங்க என்ன இதுமாதிரி

சித்ரவதை பண்ணுறீங்க... என்னத்துக்கு பணம் வேணுமுன்னு

சொல்லுங்க...

ஜான்சன்: சொன்னா...? சரி சொல்றேன்டி... ‘கிளப்வச்சு நடத்த... அதான்

சீட்டு விளையாடுற இடன்டி...

ஜாக்லின்: அதானே பாத்தேன்... எங்கே புத்தி ஏதும் வந்திருச்சோன்னு... 

நீங்களே ஒங்க அப்பாக்கிட்ட கேட்டு... கொடுத்தா வாங்கிக்கங்க...

ஜான்சன்: (கையை ஓங்கிக்கொண்டே) விட்டேன்னா... எப்படித் 

தெரியுமில்ல இருக்கும்...?

ஜாக்லின்: என்ன அடிக்கிற வேலை வச்சிக்காதிங்க... முடிவாச் 

சொல்றேன்... யார்ட்டையும் பணம் வாங்கிட்டு வர முடியாது...

ஜான்சன்:  ஒன்னக் கட்டிக்கிட்டது எனக்குப் பெரிய ரோதனையால்ல 

போச்சு... காலையில பள்ளிக்கூடத்துக்குப் போறேன்ட்டு போயிடுறாய்... நீ 

வேலைக்கு போறது... எங்களோட  கௌரவத்துதையே பாதிக்கிது... 

ராத்திரி ஆனா பக்கத்திலையே நெருங்க விடமாட்டேங்கிறாய்... ஓ மனசில

என்னதான்டி நெனச்சுக்கிட்டு இருக்காய்...?

ஜாக்லின்: போதைய விட்டிடுங்க...

ஜான்சன்:ஓ சொல்படியெல்லாம் ஆடுறதுக்கு நா என்ன பொம்மலாட்ட

பொம்மைன்னு நெனச்சியா...?  ‘அடிப்போடி... பைத்தியக்காரி... ஒன்னும்

அரியாதவனா...? உண்மை அறியாதவனா...? (பாடுகிறான்)  மயிலே...

மயிலேன்னா இறகு போடுமா...? வெடுக்கின்னு புடுங்கிட

வேண்டியதுதான்...

(ஜாக்லினைக் கட்டிப்பிடிக்க முயற்சிக்கும் பொழுது தள்ளி

விலகிக்கொள்கிறாள்)

ஜாக்லின்: பிளீஸ்... வேண்டாங்க... என்ன கட்டாயப் படுத்தாதிங்க... 

பிளீஸ்...

ஜான்சன்: தானாக் கனியிற கனிய... தடியால நா எதுக்கு அடிக்கனும்...?

ரொம்ப அடம் பிடிக்கிறாய்... அதான்... (அவளருகில் நெருங்குகிறான்)

ஜாக்லின்: நெருங்காதிங்க... பிளீஸ்...

ஜான்சன்: நா நெருங்காம... வேற யாரையும் நெருங்க விடுறியாடி...?

ஜாக்லின்: ச்சீ... மனுசன் மாதிரி பேசுங்க...

ஜான்சன்: ஒன்னிட்ட பேசிக்கிட்டு இருந்தா... ஒன்னும் சரிப்படாது... 

(ஜாக்லினை வலுக்கட்டாயமாகப் கட்டிப்பிடிக் முயற்சிக்கிறான்)

ஜாக்லின்: (பலமாக சத்தத்துடன்) என்னங்க... வேண்டாங்க... வேண்டாம்... 

வேண்டாங்க...

(ஆரோக்கியசாமியின் குரல் வெளியில் இருந்தே கேட்கிறது)

என்னம்மா... சித்ரா... என்ன சப்தம்...?

ஜாக்லின்: மாமா... (யோசித்துக் கொண்டே)  மாமா... ஒன்னு இல்லைங்க 

மாமா... கெட்ட கனவு கண்டு... கத்திட்டேன்...

ஆரோக்கியசாமி: (குரல்) ஜான்சன் இருக்கானுல்ல...

ஜாக்லின்: இருக்காருங்க மாமா...

ஆரோக்கியசாமி: (குரல்)  சரிம்மா... நா பயந்தே போயிட்டேன்... சரி

படுத்துக்கம்மா...


ஜான்சன்: (சிறிது நேரம் கழித்து)  நல்ல வேளை... ஏதோ சொல்லிச்

சாமாளிச்சிட்டாய்... சரி... சரி... நீ கீழேயே படுத்துக்க... நா கட்டில்ல

படுத்துக்கிறேன்... என்ன சரியா...?

ஜாக்லின்: ம்...ம்... (தலையசைக்கிறாள்)

(ஜான்சன் கட்டிலில் படுத்துத் தூங்குகிறான்... அருகில் இருந்த பானையில்

 உள்ள தண்ணீரைக் குடித்து விட்டு தரையில் படுக்கிறாள்.)











                  




                                                                                                                             -தொடரும்...  


-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.






























































   
























8 கருத்துகள்:

  1. குடிகாரர்களின் மனைவியர்களுக்கு இதுதானே வாழ்க்கை பாவம்.
    த.ம.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி. வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. நம்ம பகவான்ஜி மிகவும் வருத்தப்பட்டார்... தொடர்பு கொள்ளவும்... ta.ma. +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலைச்சித்தரின் வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி. பகவானோடு பேச வைத்ததற்கு மிக்க நன்றி.

      நீக்கு
  3. # பானையில் உள்ள தண்ணீரைக் குடித்து விட்டு தரையில் படுக்கிறாள்#
    நாடகத்தில் இந்த காட்சி மிகவும் சிறப்பாக வந்திருக்கும் இல்லையா ஜி :)

    dd ஜி ,ஜேம்ஸ் ஜி தொடர்கொண்டார் ,பேசியதில் மிகவும் மகிழ்ச்சி :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலான பெண்கள் பானையில் உள்ள தண்ணீரைத்தனே குடிக்கிறார்கள். ஆமாம் ஜீ இந்தக் காட்சி மிகவும் சிறப்பாக இருந்தது.

      நீக்கு
  4. கெட்ட கனவு....நாடகத்தின் போக்கையும் கதாபாத்திரத்தின் உறுதியையும் படிக்கும் வாசகர்கள் முன் நெகிழ்ச்சியாகக் கொணர்ந்துவிட்ட சொற்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அய்யா,

      தங்களின் கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...