புதிய உடன்படிக்கை
-நாடகம்.
காட்சி-1
இடம்: மாதா கோயில்
பாத்திரங்கள்: ஜான்சன், ஜாக்லின் சித்ரா, பாதிரியார் தாமஸ்,
உறவினர்கள் மற்றும் நண்பர்கள்.
(பாதிரியார் தாமஸ் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறார். மணமக்கள் ஜான்சன், ஜாக்லின் சித்ரா எதிரே நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்கள்.)
Rev.Fr. தாமஸ்: அன்புமிக்க மணமக்களே... திருச்சபையின் திருப்பணியாளர்
முன்பாகவும்... இத்திருக்கூட்டத்தின் முன்னிலையிலும்... உங்கள் அன்பை நம் ஆண்டவர் முத்திரையிட்டுக் காத்தருளுமாறு இங்கு வந்திருக்கின்றீர்கள்... ஏற்கனவே அவர் உங்களை புனித ஞானஸ்தானத்தால் அர்ச்சித்துள்ளார். இப்போதோ மற்றொரு திருவருட்சாதனத்தின் வழியாக உங்களுக்கு அருள்வளமீந்து, நீங்கள் ஒருவருக்கொருவர் என்றும் பிரமாணிக்கமாய் இருக்கவும், திருமணத்தின் ஏனைய கடமைகளை ஏற்று நிறைவேற்றவும் உங்களுக்கு ஆற்றல் அளிக்கின்றார். எனவே உங்கள் கருத்தை அறிந்து கொள்ள, திருச்சபையின் முன்னிலையில் உங்களை வினவுகிறேன்.
(மணமக்கள்
அருகில் பாதிரியார் வருகிறார்)
மணமகன் ஜான்சன்... மணமகள் ஜாக்லின் சித்ரா நீங்கள் இருவரும் முழுமனச் சுதந்திரத்துடன்... திருமணம் செய்து கொள்ள எவ்வித வற்புறுத்தலுமின்றி இங்கு வந்திருக்கின்றீர்களா?
ஜான்சன் : (மெதுவான குரலில்) வந்திருக்கின்றேன்.
ஜாக்லின் சித்ரா: (மெதுவான குரலில்) வந்திருக்கின்றேன்.
Rev.Fr. தாமஸ் : நீங்கள் மணவாழ்க்கை நெறியைப் பின்பற்றி வாழ்நாளெல்லாம் ஒருவரை ஒருவர் நேச்சவும்...மதிக்கவும் தயாராயிருக்கிறீர்களா...?
ஜான்சன் : தயாராயிருக்கிறேன்.
ஜாக்லின் சித்ரா: தயாராயிருக்கிறேன்.
Rev.Fr. தாமஸ் : நீங்கள் திருமைண ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புவதால்... உங்கள் வலது கைகளைச் சேர்த்துப் பிடியுங்கள்... இறைவன் திருமுன்... திருச்சபையின் முன்னிலையில் உங்கள் சம்மதத்தைத் தெரிவியுங்கள்.
(இருவரும் கைகளைச் சேர்த்து பிடிக்கிறார்கள்.)
ஜான்சன் இங்கே இருக்கிற ஜாக்லின் சித்ராவை உம் மனைவியாக ஏற்றுக் கொள்ளச் சம்மதிக்கிறீரா...?
ஜான்சன் : சம்மதிக்கிறேன்...
Rev. Fr. தாமஸ்: இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் நீர் இவளுக்குப் பிரமாணிக்கமாயிருந்து... உமது வாழ்நாளெல்லாம் இவளை நேசிக்கவும், மதிக்கவும் வாக்களிக்கிறீரா...?
ஜான்சன் : ஆம்... வாக்களிக்கிறேன்.
Rev. Fr. தாமஸ்: இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும் நோயிலும் நீர் பிரமாணிக்கமாயிருந்து... உமது வாழ்நாளெல்லாம் இவரை நேசிக்கவும், மதிக்கவும் வாக்களிக்கிறீரா...?
ஜாக்லின் சித்ரா: ஆம்... வாக்களிக்கிறேன்.
Rev. Fr. தாமஸ்: திருச்சபையின் முன்னிலையில் நீங்கள் தெரிவித்த இந்தச் சம்மதத்தை ஆண்டவர் உறுதிப்படுத்தி தம் ஆசியை உங்கள் மீது நிறைவாய்ப் பொழிந்தருள்வாராக... இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்.
(எல்லோரும் ‘ஆமென்’ என்று சொல்ல தாலியை பாதிரியார் மந்திரித்து)
உங்கள் அன்புக்கும் பிரமாணிக்கத்துக்கும் அடையாளமாக இந்தத் தாலியை ஆண்டவர் ஆசிர்வதிப்பாராக.
(பாதிரியார் மணமகன் கையில் தாலியைக் கொடுக்க மணமகள் கழுத்தில் தாலியைக் கட்டுகிறார். பேண்டு வாத்திய இசை கேட்கிறது.)
- தொடரும்...
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.

