ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

ஒரு பார்வையின் மௌனம்...! -சிறுகதை.




ஒரு பார்வையின் மௌனம்


(மணவை ஜேம்ஸ்)

பிரியமான கவிஞர் வசந்த லீலாவிற்கு,

               தங்கள் இரசிகன் அழகேசன் எழுதுவது நலம்.  நாடுவதும் அதுவே!
‘கரும்புவில்இதழில் இந்த வாரத்தில் வெளியான தங்களின் கவிதையில் நான் மிகவும் இரசித்துப் படித்த வரிகள்,

‘நிலாவே!
 நீ என்ன தோசைகல்லா?
ஒவ்வொரு ராத்திரியும்                 
என்னைச் சுடுகிறாயே!
நீயும்...
என்னைச் சுட்டுக் கொல்லாதே!

 நிலவும் தனிமையில்...
உலவும் வெறுமையில்...
வஞ்சச் சுமைதனை
நெஞ்சம் தாங்குமோ?  

               தங்கள் கவிதைக்கு அப்படியொரு காந்தசக்தி இருக்கிறது...! படிக்கின்றபொழுது அதோடு ஒட்டிக்கொள்கிறேன் என்று சொல்வதா? அல்லது என்னைக் கவர்ந்து கொள்கிறது என்று சொல்வதா? என்றே எனக்குத் தெரியவில்லை! 

              கவிதைக்குள் சோகம் இழையோடுகிறதே! சோகத்தைப் பங்கிடுவதும் சுகம்தானே! ‘நீயும் சேர்ந்து என்று நீங்கள் சுட்டு விரலை நீட்டி யாரைச் சொல்கிறீர்கள்?  வரும் கடிதத்தில் விளக்கம் தருவீர்கள் என்று நம்புகிறேன்.

              தங்களின் ஒவ்வொரு கடிதத்தையும் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.  எனது கடிதத்திற்குத் தவறாமல் பதில் எழுதுவதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

                                                                                                        அன்பு நெஞ்சன்,
                                                                                                           க.அழகேசன்.

- கடிதத்தை  உள்வைத்து நாக்கின் எச்சிலைக் கவருக்குக் கொடுத்து ஒட்டினான்.


ஒட்டிய கவரை எடுத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாய்ச் சென்று தபால்அலுவலகத்தில் இருந்த தபால் பெட்டியில் அந்தக் கவரைப்போட்டு அதன் உடம்பைத் தட்டிக் கொடுத்துவிட்டு வீட்டை நோக்கி நடந்தான்.


          ணிக்கூண்டு சரியாகப் பத்துமணியைக் காட்டிக் கொண்டிருந்தது.  விரைவாகச் சாப்பிட்டுவிட்டு வயலுக்குப்போக வேண்டுமென நினைத்துக் கொண்டே வீட்டினுள் நுழைந்தான்.  வீட்டிலே யாருமே இல்லை... அம்மா, அப்பா வயலுக்குச் சென்றிருந்தனர்.
பார்ப்பவர்களை இன்னொருமுறை பார்க்கத் துண்டும் முகம்.  சுருட்டை முடி.  மாநிறம்தான் என்றாலும் அழகென்றால் அப்படி ஓர் அழகு.  ஆமாம்... அழகேசனின் பெற்றோர் கல்லூரிப் படிப்புப் படித்திருக்கும் இவனா இனிமேல் வளஞ்சு குனிஞ்சு வேலை செய்யப் போறான் என்று நினைத்திருந்தார்கள்.  ஆனால் அவர்களின் எண்ணத்திற்கு மாறாக ஓரளவு தோட்டத்து வேலைகளைச் செய்யவே செய்தான்.

           நெல்லுச்சோற்றைச் சாப்பிட்டுவிட்டுத் துண்டையெடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு புறப்பட்டான்.

     “சார்!... போஸ்ட்...சைக்கிள் மணியை அடித்தவாறு தபால்காரர் வீட்டின்முன் வந்து நின்றார். வாசலில் வந்து, வந்த கடிதத்தை வாங்கினான் அழகேசன்;  அந்தக் கடிதம் வசந்த லீலாவிடமிருந்து வந்திருந்தது.  அவன் எதிர்பார்க்கவேயில்லைஅழகேசனின் ஆனந்தத்திற்கு அளவேயில்லை.  ஏனென்றால் அவன் கடிதம் போடாமலே வந்த முதல் கடிதம் அது என்பதால்,
அழகேசன் அவசரமாகக் கவரைப் பிரித்தான்.  ஓர் அழைப்பிதழ் உள்ளே இருந்தது.  ஒரு வேளை வசந்த லீலாவிற்குத் திருமணமாக இருக்குமா? என மனதில் எண்ணிக் கொண்டே அழைப்பிதழை வெளியே எடுத்துப் பார்த்தான்.  அவன் நினைத்தது தவறு என்று பார்த்ததுமே தெரிந்தது.

     ‘கவிதைப் புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ்–வருகிற ஞாயிற்றுக்கிழமை “ஒரு தீபம் தீயாகிறதுவசந்த லீலா எழுதிய நூல் வெளியீட்டைத் தாங்கி வந்திருந்தது.  அதில் ‘அவசியம் தங்களை எதிர்பார்ப்பேன் என்று எழுதி வசந்த லீலாவின் கையொப்பமிடப்பட்டு இருந்தது.

     ‘என் அபிமான கவிஞரின் புத்தகம் வெளியீட்டு விழாவிற்கு நான் போகாமலா?   விழா அவுங்க ஊரான மெட்ராஸ்ல... இன்றைக்கு வெள்ளிக்கிழமை... நாளைய இரவே பயணப்பட வேண்டும்.  வீட்டில் உண்மையைச் சொன்னால் விடமாட்டார்கள் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும்!

                 அழகேசன் வயலுக்குச் சென்றான். 
                               

     “என்னடா இப்பத்தான் வர்றா... தலைக்கு மேலே வேல கிடக்கிது...நெற்றி வியர்வையை நிலத்தில் சிந்தியபடி அம்மா சொல்ல, மேலே பார்த்தான் சூரியன் சுட்டெரித்துக் கொண்டிருந்தான்.

     “ஆமா... இவன் வேல செஞ்சு கழட்டப் போறான்... அறிவு கெட்ட பய...“ பொரிந்து தள்ளினார் அப்பா.

     இதற்கிடையில் தன் பேச்சை மெல்ல நுழைத்தான்.
“அம்மா... மெட்ராஸ்ல... எச்.எம்.டி. கம்பனியில இருந்து வேலைக்கு இண்டர்வியு வந்திருக்கும்மா... நாளைக்கு நைட் கிளம்பணும்...”  பொய்க்கு உண்மைபோலச் சட்டை மாட்டினான்.


     “மெட்ராஸ்லையா... அப்படின்னா சம்பளம் நிறையா கிடைக்குமே...!அம்மா வாயைப் பிளந்தாள்.

     “அவனுக்கென்ன வேலையா கொடுத்துட்டாங்க... போடி வெவஸ்த கெட்டவளே... இண்டர்யுதானே... போடா போய் ஒரு மூட்டைக் கடலையை வித்து... அந்தப் பணத்தை வச்சுப் போயிட்டு வாடா...அப்பா அனுமதி கொடுக்க,  கடலை மூட்டையைத் தேடிச் சென்றான்.

     ‘ஆமாம்... எச்.எம்.டி.  பெங்களுர்லல்ல இருக்கு... மெட்ராஸ்ன்ட்டோம்... வீட்ல அதெல்லாம் யாருக்குத் தெரியப்போவுதுஎன்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே ஆகவேண்டியதைக் கவனித்தான்.

     டுத்த நாள் கதிரவன் மறையுமுன்னே நிலவு தன் பயணத்தைத் தொடங்கத் தயார்படுத்திக் கொண்டு இருந்தது.  திருச்சி ஜங்ஷனில் நுழைந்து டிக்கெட் கவுண்டருக்குச் சென்றான். 



     “மெட்ராஸ்க்கு எவ்வளவுங்க டிக்கெட்?

            “நீங்க படிச்சவங்கதானே?”  அந்தப் பெண்மணி  கேட்டதும் இவனுக்குத் தூக்கிவாரிப்போட்டது.

           “ ஏங்க“

           “ இல்லே... படிச்சவங்கனா... போர்டு பக்கத்திலேதானே இருக்கு... அதுக்காகக் கேட்டேன்.

முகத்தில் அசடு வழியப் போர்டைப் பார்த்தான் இருபத்தி ஒன்பது ரூபாய் என்று போர்டு காட்ட...“ஒரு டிக்கெட் கொடுங்க...என்றான் அழகேசன்.  தேதிய பஞ்ச் பண்ணி வேகமாக டிக்கெட் வெளியில் வந்து விழுந்தது.  பணத்தைக் கொடுத்துவிட்டு டிக்கெட்டை எடுக்கக் கையை நுழைத்தவன், “எக்ஸ்கியுஸ் மீ மேடம்... பெர்த் கிடைக்குங்களா?


     “ஆ... இங்க சிட்டிங்கே ரிசர்வ் இல்லையாம்... பெர்த் கேட்க வந்திட்டீங்க...“

பேசாமல் டிக்கெட்டை எடுத்துக்கொண்டு... ஆடினரியில் உட்கார்ந்தே போகவேண்டுமென்பதால் ‘ஹிக்கிம் பாதம்ஸ்புத்தகக் கடையை அவன் கண்கள் வட்டமிட்டன.

     கவிஞர் மோசேயின் ‘பாடத் தெரியாத பன்னீர்ப் பூக்கள்கவிதைப் புத்தகத்தை வாங்கிக் கொண்டு இருக்கும் பொழுது, ‘பயணிகளின் கவனத்திற்கு... ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் நான்காவது பிளாட்பாரத்தில் இருக்கிறது.  சரியாக ஒன்பது மணிக்குப் புறப்படும்’ -என ஸ்பீக்கரில் ஒலித்தது.

     ராக்போர்ட் புகைவண்டியில் இடத்தைப் பிடிக்கப் போராடி, வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் அமர்ந்தான். ‘ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் அடுத்த ஐந்து நிமிடங்களில் நான்காவது பிளாட்பாரத்திலிருந்து புறப்படும் என்ற அறிவிப்பினைத் தொடர்ந்து பதினைந்து நிமிடம் கழித்து வண்டிப் புறப்பட்டது. 
                                          
         வண்டி முன் நோக்கி நகர... எண்ணம் பின்னோக்கி நகர்ந்தன!
ஒன்னரை ஆண்டுகள் இருக்கும்... பேனா நண்பர்களைப் போல ... ஆனால் நெருக்கமாகப் பழகிவிட்டோம்.  கவிஞர் வசந்த லீலாவின் மீது அளவிட முடியாத அன்பு.  நான் கொண்டது பாசமா? காதலா? அவர்களின் கவிதையைக் காதலித்து... காந்தர்வக் காதல் கொள்ளவது எப்படி முறையாகும்? அவர்களின் எண்ணங்கள் எப்படி இருக்குமோ?  அவர்களின் கவிதையை மட்டும் இரசிக்கிறேனா? நான் உண்மையான இரசிகனா? அழகேசனின் மனம் என்ற குரங்கு அங்கும் இங்கும் தாவிக்கொண்டே இருந்தது.  வண்டி சென்று கொண்டே இருந்தது.  ஒரே குழப்பத்தில் தெளிவு கிடைக்கும் என்பார்களே... இவனுக்குக் கிடைத்தபாடில்லை!

                 அழகேசன் வெளியே பார்த்தான் ஒரே இருளாகத் தெரிந்தது.  அமர்ந்தவாறே தூக்கம் இவனைத் தழுவத் தூங்கிப் போனான்.


       அருகில் இருந்தவர் இவனை எழுப்பிவிட மெட்ராஸ் வந்ததை அறிந்து, வண்டியை விட்டு இறங்கி வெளியில் நின்ற டிக்கெட் கலெக்டரிடம் காலாவதியான டிக்கெட்டைக் கொடுத்துவிட்டு அழகேசன் வெளியே வந்தான்.



            கரப்பேருந்தைப் பிடித்து விழா நடக்கும் அரங்கத்திற்குள் நுழைந்தான். அரங்கு விளக்குகளின் வெளிச்சத்தில் முகம் கழுவிக் கொண்டிருந்தது.  அரங்கத்திற்குள் அரைகுறையாக மக்கள் நிரம்பிக் கொண்டிருந்தனர்.  வாயிலில் அழகேசனை யாரோ வரவேற்க உள்ளேபோய் நாற்காலியில் அமர்ந்தான்.  மேடையில் பெண் உருவமே தென்படவில்லை.  ஒரு சில ஆண்கள் மேடையில் அங்குமிங்கும் அலைந்து கொண்டு இருந்தனர். மேடையில் பெண் உருவமே தென்படவில்லை.   கவிஞர் வசந்த லீலாவைத்தான் சொல்கிறேன்.  மெல்லிய சப்தத்தில் வயலின் இசைமட்டும் ஒலித்துக்கொண்டிந்தது. 

          அழகேசனுக்குத் தெரிந்தவர்கள் யாரும் இல்லாததால் யாரிடம் கேட்பது என்ற தயக்கம் வேறு...! இன்னும் சொல்லப்போனால் இவன்தான் வசந்த லீலாவையே பார்த்தது கிடையாதே!  இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றதும்  கிடையாது என்பதால் சங்கோஷப்பட்டுக்கொண்டே அமர்ந்திருந்தான்.

          கூலிங்கிளாஸ்சில் அடக்கமாக... புன்சிரிப்புடன்... இருகரம் கூப்பி வணங்கிக்கொண்டே ஒரு பெண் மேடையில் தோன்ற... அரங்கத்தில் இருந்தவர்கள் கரவொலியெழுப்பஅவர் கவிஞர் வசந்த லீலாவென்று உறுதியாகத் தெரிந்தது.


           இளநீல வண்ணச் சேலையில்...நல்ல அழாகக் காட்சியளித்தார்.  நீண்ட கூந்தலில் ஓர் ஒற்றைச் சிவப்பு ரோஜா அழகை மேலும் அழகுபடுத்திக் காட்டியது.  இருபது வயதுக்கு மேல் கண்டிப்பாக இருக்காது.  கவிதை நூல்கள் மேடையில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.  அழைப்பிதழில் போட்டிருந்த சிறப்பு அழைப்பாளர்களாத்தான் இருக்கவேண்டும்....  அவர்களெல்லாம் மேடையில் வந்து அமர நிகழ்ச்சிகள் ஆரம்பமாயி.

          நான் வசந்த லீலாவையே பார்த்துக்கொண்டிருக்கிறேன்.  ஆனால் அவர்கள் என்னைப் பார்க்க வாய்ப்பில்லை.  மனதில் எனக்கொரு எண்ணம் தோன்றியது... கூலிங்கிளாஸ்... கவிஞர் கழட்டியிருக்கலாம்... அவனது மனதுக்கு ஒரு குறையாகத் தெரிந்தது.  நமக்கு அசிங்கமாகத்   தெரிந்தது.  நமக்கு அசிங்கமாகத்   தெரிவது... மற்றவருக்கு அழகாகத் தெரியும் அல்லவா?  அது அவரவர் விருப்பம்.  சிட்டியில் வாழ்பவர்கள்... நாமோ பட்டிக்காடு... பட்டணத்தில் வாழ்க்கை நமக்கு எப்படி விளங்கும்?

         அழகேசன் யோசித்துக் கொண்டிருக்கையில் ஒலிபெருக்கியில் ஒலித்த வார்த்தைகள் இப்பொழுது மட்டும் எப்படிக் காதில் விழுந்தன என்று தெரியவில்லை.

         ‘ஒரு கண் பார்வையை வைத்துக் கொண்டு... இவ்வளவு பெரிய சாதனை செய்யும்...புரட்சிப்பெண் கவிஞர் வசந்த லீலா....’  ஒலிபெருக்கியில் பேசிய வார்த்தை அழகேசனைத் திடுக்கிட வைத்தது.

        ‘நான் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்றை...எப்படி எனக்குத் தெரியாமல்... ஒரு கண் பார்வையில்லையா?  நிஜமாகவா?...கூலிங்கிளாஸ் அணிந்திருப்பதைத் தவறாக நினைத்துவிட்டோமே!

        நூல் வெளியிடப்பட்டு... நிகழ்ச்சி நடந்து கொண்டேயிருந்தது...அந்த நிகழ்வில் மனம் பதியவில்லை!  இதயமே துடிக்க மறந்து நின்று
போனதுபோல் இருந்தது. நூலைப்பற்றிய பாராட்டுரைகள் அழகேசனின் காதுகளில் விழவில்லை.

           விஞர் வசந்த லீலா ஒலிவாங்கிக்கு முன்வந்து பேசத் தொடங்கினார்.

        “எனது அழைப்பினை ஏற்று வருகைபுரிந்த அனைவருக்கும் வணக்கம். என்னுடைய பிரிய இரசிகர் திரு.அழகேசன் அவர்கள்... கடிதம் மூலம்தான் தெரியுமே தவிர நேரில் பார்த்தது இல்லை.... இது வரையில் நூறு கடிதங்களுக்கு மேல் எனக்கு எழுதியிருக்கிறார்.  அவரின் ஊக்கம் என்னை இந்த அளவிற்கு எழுதத் தூண்டியது என்று சொன்னால் அது மிகையில்லை...!

        அவர் இங்கு வந்திருப்பார் என நினைக்கிறேன்.  அவர் இங்கு வந்திருந்தால்... மேடையில் வந்து ஒரு சில வார்த்தைகள் பேசும்படி அழைக்கிறேன்.

           அரங்கத்தில் அழகேசன் யாரென அங்குமிங்கும் திரும்பிப் பார்த்தனர்.  அழகேசன் இதை எதிர்பார்க்கவேயில்லை.  என்ன பேசுவது என்று தெரியாமலே மேடைக்குச் சென்றான்.  மேடை பயத்தை வெளியில் காட்டாமல் மைக்கைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு பேச ஆரம்பித்தான்.

           ‘எல்லோருக்கும் என் வணக்கம்.  நான் கடிதம் போட்டதைக் கவிஞர் ஏதோ என்று எண்ணாமல்... இவ்வளவு மதிப்பு அளித்ததற்கு உண்மையிலே பெருமைப்படுகிறேன்.  கவிஞருக்கு ஒரு கண்ணில் பார்வையில்லை என்பதை இப்பொழுதுதான் அறிந்தேன்...  உயரிய இலட்சியத்துடன்... சமுதாயப் பார்வையுடன் எழுதும் கவிதையில்... நாளைய சமுதாயம் விழிப்படையும்... என்ற நம்பிக்கை நிரம்ப இருக்கிறது.  நன்றிஎன்று அழகேசன் முடித்தான்.


        அதன் பிறகு இருக்கையில் வந்து அமர்ந்தவனுக்கு நடந்த நிகழ்வில் மனம் ஈடுபாடு கொள்ளவில்லை.  நிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்தன.

           வந்தவர்களுக்கு நன்றி சொல்லி அனுப்பிவிட்டு, வசந்த லீலா அழகேசனை அழைத்துக் கொண்டு “அருகில்தான் இல்லம்... நடந்தே போகலாம் என்றார்.

          இருவரும் பேசிக்கொண்டே நடந்தார்கள்.

          “ஆமாம்... ஒங்க வீட்ல இருந்து யாரும் வரலீங்களா?என்று கேட்டான் அழகேசன்.

         “எங்க வீட்ல இதில யாருக்கும் விருப்பம் இல்ல... ஆமாம் நிகழ்ச்சியெல்லாம் எப்படியிருந்தது...வசந்த லீலா கேட்க...

         “ரொம்ப நன்றாக இருந்தது என்றான் அழகேசன்.

        “ஒங்களுக்கு ஒரு கண் பார்வையில்லைன்னு தெரிஞ்சதும்... ரொம்பத் துடிச்சுப் போயிட்டேங்க... மனதுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு...

                 “எனக்கு இது பழகிப்போச்சு...புன்னகையோடு சொன்னார்.

        “பிறவியிலேயா...? இல்ல....

                  “பிறவியிலேங்கிறதுனால.... ஒர்ரி பண்றதில்ல... இந்தாங்க என்னோட கவிதைப் புத்தகம்”  வசந்த லீலா நூலைக் கொடுக்கையில் அதை வாங்கும் பொழுது புத்தகம் தவறிக் கீழே விழுந்துவிட, புத்தகத்தைக் குனிந்து எடுத்தாள். அப்பொழுது கழுத்தில் மாங்கல்யம் ஊஞ்சலாடியதைப் பார்த்தான்.

         “ஏங்க ஒங்களுக்கு மேரேஜ் ஆயிடுச்சா... ஒங்க கணவரை அறிமுகப்படுத்தவேயில்லையே?”  அழகேசன் கேட்டவுடனேயே வசந்த லீலாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

         “நான் குருடியாம்... அதுனால வேறு யாரோ ஒருத்திய சேத்து வச்சுக்கிட்டுக் குடும்பம் நடத்துறாரு... அவரு என்ன விட்டுப் பிரிஞ்சு ரெண்டு வருஷத்துக்கு மேலாகிடுச்சு...!

         “அவரு... பேரு?”-கண்ணீரைத் துடைத்துக் கொண்டே...

         “தி பேமஸ் டைரக்டர் ராஜராஜன்...!

                    “அவரா ஒங்க கணவர்... அவரா இப்படி?

                   “ஆமாம்... நாட்டுல பசுத்தோல் போர்த்திய புலியா சிலபேர் வாழ்ந்திட்டு இருக்காங்க....எ சொந்தக் கதயச் சொல்லி ஒங்கள நோகடிச்சுட்டேன்

        “நோ..நோ... அதெல்லாம் ஒன்னுமில்லை...” 
-இருவரும் பேசிக்கொண்டே நடக்க வசந்த லீலாவின் வீடு வந்து விட்டது.


                 வீட்டின் முன் கார் நிற்பதைக் கண்டு, யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே உள்ளே நுழைந்த வசந்த லீலாவுக்கு ஷாக் அடித்தது போல இருந்தது. 

                 டைரக்டர் ராஜராஜன் உள்ளே அமர்ந்திருந்தார்.  வசந்த லீலாவின் பெற்றோர் அமைதியாக அவரின் அருகே நின்று கொண்டிருந்தனர்.  ராராஜன் குரலை உயர்த்திப்பேச ஆரம்பித்தார், “நா செஞ்சது தப்புன்னு நெனச்சு வந்தா... இங்கு வந்த பிறகுதான் தெரியுது அதே தப்பை நீ செஞ்சிக்கிட்டு இருக்கேன்னு...”  அழகேசனை ஏறஇறங்கப் பார்த்துப் பேசிய ராஜராஜனின் சட்டையைப் பிடித்து இடது கையில் கோர்த்தவாறே வலது கையால் அடிக்க ஓங்கினான் அழகேசன்.

        “அவர...ஒன்னும் செய்யாதிங்க... விட்டுங்க... வேறொரு ஆணோடு சேர்த்துப்  பார்த்ததுக்கே அவரால பொறுக்க முடியல... ஆனா...நீங்கமட்டும்
வேறொருத்தியோட குடும்பம் நடத்துவீங்க...நா...எல்லாத்தையும் சகிச்சுகிட்டு இருக்கனும்... ஏன்னா நா பொண்ணாப் பொறந்திட்டேன்... அப்படித்தானே...? நீங்க நெனச்சமாதரியே ஒருவேளை... நா தப்புச் செஞ்சிருந்தாலும் மன்னிக்க வேண்டியதுதானே...நீங்க செஞ்சா மன்னிக்கனும்...  நாங்க செஞ்சா...? மன்னிக்க முடியாத குற்றமா? அதெப்படி?  கற்புன்னா  பெண்ணுக்கு மட்டும்தானா...?  ஆணுக்கில்லையா...?  இனி எ மூஞ்சியில முழிக்காதிங்க...தயவுசெஞ்சு இங்கிருந்து போயிடுங்க... ஐ சே யு கெட் லாஸ்ட்...என்று கோபத்தில் பேசிய பொழுது வசந்த லீலாவின் முகம் சிவந்ததைக் கண்டு மிரண்டு போய் ராஜராஜன் தலைகுனிந்தபடி வீட்டைவிட்டு வெளியேற முனைந்தார்.
 “நீங்க வாங்க...நாம மாடிக்குப் போகலாம்”  என்று அழகேசனைப் பார்த்துச் சொன்னார் வசந்த லீலா.

         “ஒங்களுக்கு ஆட்சேபனையில்லைன்னா...” .அழகேசனின் பேச்சை இடைமறித்த வசந்த லீலா அழகேசனின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றார்.
         “எதாயிருந்தாலும் மாடியில பேசலாம்...வாங்க...

          மாடியில் இருவர் மட்டுமே இருக்க...

         அங்கொரு மௌனம் தவமிருந்தது!

(21-06-1984 ஆம் ஆண்டு  எழுதப்பட்ட சிறுகதை)

-மாறாத அன்புடன்,

 மணவை ஜேம்ஸ்.

29 கருத்துகள்:

  1. அய்யா வணக்கம்.
    மட்கிய காகிகத்தில் அமைந்த உங்கள் அழகிய கையெழுத்தில் காலத்தைக் கடந்து ஓடிய உங்களின் இக் கதையைப் பார்க்கத் தந்தீர்கள்.

    இணையத்தில் அழகிய பின்புலத்தில் படங்களோடு இந்தக் கதையை மீளப்பார்க்கும் போது, புதுமையில் பழைமையைக் கண்டது போல் இருக்கிறது.

    புதிய மொந்தையில் பழைய கள் என்பார்களே அது போல.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவரை எந்த இதழிலும் வெளிவராத இந்தக் கதை மட்கிய காகிதத்தில் இதுவரை கிடந்தது.

      தங்கள் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. யப்பா என்னாப்பா அப்போவே இப்படியா...
    அருமையான கதை ..
    தம +

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அய்யா... தங்களின் பாராட்டிற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. தங்கள் கதை அருமை. அதைவிடவும் நடை அருமை. 84 ஆம் ஆண்டு எனும் போது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் கதை. சமுதாய விழிப்புனர்வு என்றும்,,,,,,,,,,,
    அருமை.

    பதிலளிநீக்கு
  4. தங்களின் பாராட்டுதலுக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  5. நீங்க செஞ்சா மன்னிக்கனும்... நாங்க செஞ்சா...? மன்னிக்க முடியாத குற்றமா? அதெப்படி? கற்புன்னா பெண்ணுக்கு மட்டும்தானா...? ஆணுக்கில்லையா...?-----சுட்டெரிக்கும் வார்த்தைகள். அய்யா. த.ம5

    பதிலளிநீக்கு
  6. அன்புள்ள அய்யா,

    தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  7. காக்கிசட்டை போஸ்ட்மேன் வரும்போதே நினைச்சேன் ,இது எண்பதின் கதையென்று !
    #அங்கொரு மௌனம் தவமிருந்தது!#
    அந்த தவ மௌனம் சம்மதம் என்பதற்கு அறிகுறியா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள ஜீ,

      மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
      நாணமே ஜாடையால் ஒரு வார்த்தைப் பேச வேண்டும்.

      தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. எத்தனை வருடங்கள் ஆனாலும் இன்னும் நிலைமை மாறவில்லை என்பதுவருத்தமே! சிறப்பான கதை! நன்றி!

    பதிலளிநீக்கு
  9. அன்புள்ள அய்யா,

    தங்களின் பாராட்டிற்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  10. அருமை மணவையாரே 1984 லேயே பிரமாண்டம்தான் வாழ்த்துகள் பொருத்தமான புகைப்படங்கள் அருமை திருச்சி ட்டூ சென்னை 29 ரூபாய் மலைத்தேன் ஓ.... 1984 சரிதான்
    தமிழ் மணம் 8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி... அப்பொழுது நான் திருச்சி, அரியமங்கலத்தில் உள்ள S.I.T. யில் படித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது மணப்பாறையிலிருந்து புகைவண்டியில்தான் சென்று வருவோம். மூன்று மாதத்திற்குச் சீசன் டிக்கட் 25 ரூபாய்தான்.

      தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. அருமை ஐயா அருமை
    எத்தனை ஆண்டுகள் ஆனால் என்ன
    நிலைமை இன்றும் மாறியதாக தெரியவில்லையே
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அய்யா...! தங்களின் பாராட்டிற்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      தங்களின் பாராட்டிற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. அருமையான பதிவு
    கதை நகர்வு நன்று
    படிக்க தூண்டும் பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி அய்யா.

      நீக்கு
  14. பல ஆண்டுகளுக்குப் பின் மறுபடி பதிவு செய்தாலும் கருத்து, கதை போகும் பாங்கு, உணர்வுகள் வெளிப்படுத்தப்படும் விதம் என்ற அனைத்து நிலையிலும் இன்றும் பொருந்தி வருகின்றன. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் பாராட்டுதலுக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி அய்யா.

      நீக்கு
  15. தங்களின் பாராட்டிற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
  16. அருமையான கதை.... பொய்க்கு உண்மைபோலச் சட்டை மாட்டினான். ரசித்தோம். ஆனால் அந்த பொய் இறுதியில் ஒரு நல்ல உண்மையை உறுதிப் படுத்தியதுதானே முடிவு அருமை!

    21-06-1984 ஆம் ஆண்டு எழுதப்பட்ட சிறுகதை) ஏன் இப்படிப் பரண் மேல் போட்டு.....வெளியிட்டிருக்கலாமே நண்பரே எங்களிடமும் இப்படித்தான் பல மக்கிய காகிதங்கள் உள்ளன. பல எழுத்துக்கள் இப்போது மறைந்து புரியாமல் உள்ளதால் அதை மீண்டெடுக்கக் கஷ்டமாக இருக்கின்றது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      கதையை இரசித்துப் படித்து கதையைப் பாராட்டியதற்கு மிக்க நன்றி.
      எனக்கே வியப்பாகத்தான் இருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன் எழுதியது... நான் எதை எழுதினாலும் கையெழுத்திட்டு தேதி குறிப்பிடுவது வழக்கம்.

      நீக்கு
  17. உங்களுடைய இந்த பதிவு இன்றைய வலைச்சரம் http://blogintamil.blogspot.com/2015/07/thalir-suresh-day-7-part-2.html இல் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரமிருப்பின் சென்று பார்க்கவும். நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள அய்யா,

      என்னுடைய பதிவு வலைச்சரத்தில் அடையாளப்படுத்தியதைப் பார்த்து பெரிதும் மகிழ்ந்தேன்.

      -மிக்க நன்றி.

      நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...