புதன், 1 நவம்பர், 2023

மேதகு ஆயருக்கு வாழ்த்து மடல்.


திண்டுக்கல் மறைமாவட்ட

மேதகு ஆயர் தாமஸ் பால்சாமி அவர்களுக்கு  

 வாழ்த்து மடல்

 






 

உறவுகளில் நல்லுறவாய் உதித்த திங்கள்!

            உன்னதரே நற்பூலாம் பட்டி மண்ணின்

திறம்பாட வந்திட்ட தென்றல் காற்றே!

     தெய்வஅருள் கொண்டவரே! திருவின் பெற்ற

துறவறத்தைத் தூயவெண்மை தெய்வத் தொண்டை

     திருச்சிமா நகரத்தில் தெளிவின் ஏற்றீர்!

அறம்தாமஸ் பால்சாமி அடிகள் நெஞ்சம்!

     ஆயர்!மனத் தூயரிந்த அகிலம் வாழி!

 

 

முதற்பணியை மேலப்புதூர் பங்கில் ஏற்றீர்!

     முதுபழைய கோவிலிலும் புதுமை செய்தீர்!

உதவியென வந்தவர்க்காய் உம்மைத் தந்தீர்!

     உயர்கைலா சபுரத்தில் உயர்ந்து நின்றீர்!

பதவிவரும் போகுமதைப் பெரிதாய்க் கொள்ளீர்!

            பாத்திமா நகர்கோயில் பணியும் கொண்டீர்!

மதமற்ற மதப்பணியை மண்ணில் தொண்டாய்

     மறைபரப்பி மணம்பரப்பும் மலரே வாழி!

 

 

தன்னையே உலகிற்காய்த் தந்த ஏசு

            தாள்பணிந்தீர்! மறைபரப்பும் தந்தை ஆனீர்!

மின்னலென நொடிபூத்து மறையும் வாழ்வில்

     மேன்மையுறு ஞாயிறென மிளிர்ந்தீர் தொண்டால்!

கன்னலெனும் அருளுரையும் கசடு நீங்கக்

     கனிந்தருளும் திருவாக்கும் கருத்தில் தைக்க

அன்னையென அன்பீந்த அருளின் தந்தாய்

     ஆயர்நீர் மந்தையெங்கள் வாழ்த்தை ஏற்பீர்!

 


 

தோன்றின்நற் புகழோடு தோன்றச் சொன்ன

           தொல்மரபு வள்ளுவனின் வாக்கைக் காத்தீர்!

ஈன்றதினும் பெரிதுவந்தே இருப்பாள் அன்னை!

         இன்கனிகள் உம்மிதயம்! எமக்குத் தந்தீர்!

சான்றோனாய் அவைமுந்தி இருந்து தந்தை

        சபைநடுவே பெருமையுறச் செய்தீர்! ஆய

ஆன்றோரே! தாமஸ்பால் சாமி தந்தாய்!

         அன்புடனே வணங்குகிறோம்! அருளே! வாழ்க!

 









-மாறாத அன்புடன்,

மணவை ஜேம்ஸ்.

4 கருத்துகள்: